தேவாலய கைக்குண்டு குறித்து போலீசார் பொய் சொல்கிறார்கள் : கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு (CCTV காட்சிகளுடன்)

பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் வைக்கப்பட்ட குண்டு குறித்து விசாரிக்கும் போலீஸ் குழுக்களிடம் கர்தினால், போலீசார் உண்மைக்காக பணியாற்ற வேண்டுமே தவிர, அரசியல்வாதிகளுக்கு சாதகமாக இருக்கக்கூடாது என்றும், தயவு செய்து அவர்கள் கண்முன் நடப்பதை மறைத்து பொய் சொல்வதாக இருந்தால் தங்களது சீருடைகளை கழற்றிவிட்டு செல்ல வேண்டும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள பேராயர் இல்லத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த சம்பவத்தை மிகவும் கேவலமான முறையில் மூடி மறைக்க பொலிஸார் முயற்சிப்பதாக கர்தினால் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்,

அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, எங்கள் தேவாலயத்தில் பல ஆண்டுகளாகப் பணியாற்றிய, சங்கிர்த்தியானாக ( தேவாலய உதவியாளர்) இருந்த ஒருவரும், அவருக்கு உதவியாக இருந்த ஒரு வேலைக்காரன் உட்பட நான்கு பேரை போலீஸார் அழைத்துச் சென்றனர். கிறிஸ்தவரான பானி என்பவரே இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தயவு செய்து இன்று காலையிலிருந்து சிசிடிவியைப் பாருங்கள் என்று தேவாலயத்துக்கு பொறுப்பான குருவானவரிடம் கூறினேன். ஏனென்றால் மாலை மூன்று மணிக்கு மேல் காட்சிகளைப் பார்த்தால் போதும் என காவல்துறை கூறி உள்ளது.

காலையில் இருந்து பார்க்க சொல்லி மத குருமார் போலீசார் கேட்டபோதும், ​​அது குறித்து போலீசார் அதிக ஆர்வம் காட்டவில்லை.

வெடிகுண்டு 9.52க்கு கொண்டு வரப்பட்டதா?

அதன்படி, காலை 9.52 மணியளவில் ஒரு பையுடன் கருப்பு கால்சட்டை மற்றும் புஷ் சட்டையுடன் ஒரு நபர் தேவாலயத்திற்குள் நுழைவதைப் பார்க்கிறோம். அவர் தேவாலயத்திற்குள் நுழைந்தபோது, ​​​​அவரது நடத்தை அவர் ஒரு கத்தோலிக்கர் அல்ல என்பதை தெளிவுபடுத்தியது.அவர் சிலுவை அடையாளத்தை தவறாக போடுகிறார். அத்தோடு அவர் நொண்டிக் கொண்டே தேவாலயத்தினுள் நுழைகிறார்.அவர் வெளியேறும் போது அப்படிச் செல்லவில்லை.

கதவுக்கு அருகில் ஒரு மூலையில் ஒரு சிலை உள்ளது. அங்கு சென்று அமர்ந்த குறிப்பிட்ட நபர் எதோ குனிந்து செய்கிறார். அந்த நபர் தனது கால் சட்டை பையிலிருந்த எதையோ இழுப்பதோடு, குனிந்து ஏதோ செய்வதை அவதானிக்க முடிகிறது.

அச்சமயத்தில் தேவாலயத்தில் அலங்காரங்களைச் செய்து கொண்டிருந்த ஒருவர் உள்ளே வருவதை கண்டதும், ​​​​அந்த நபர் அவசர அவசரமாக தேவாலயத்தை விட்டு வெளியேறி வேகமாக நடக்கிறார். அப்படி நடந்து செல்லும் போது அவர் நொண்டிக் கொண்டு செல்லவில்லை, அந்த நபர் தனது பாக்கெட்டில் வைத்து எதாவது ஒரு பொருளைக் கொண்டு வந்ததால், அதனால் நொண்டி போல நடந்து வந்திருக்கலாம் என நாங்கள் ஊகிக்கிறோம்.

நாங்கள் சொல்லும் இந்தக் காட்சிகளை போலீஸார் கண்டுகொள்ளவே இல்லை. அவர்கள் காலை காட்சிகளை பார்க்காது , மாலை மூன்று மணியிலிருந்து ஆரம்பிக்கும் சீசீடீவி காட்சிகளை மட்டும் பார்க்கச் சொன்னது ஏன் என்பதுதான் நமக்குள்ள பிரச்சனை. ஏன் காலையில் இருந்து பார்க்கவில்லை. மாலை நான்கு மணியிலிருந்து தான் நால்வரின் காட்சிகளைப் பார்த்தோம்.

பானி என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தேவாலயத்தை சுத்தம் செய்யும் பொறுப்பில் உள்ளவர். அவர் ஒரு விளக்குமாறை பாவித்து தேவாலயத்தை சுத்தம் செய்கிறார். அவர் அந்த மூலைக்கு வந்ததும் குனிந்து எதையோ எடுத்து மேலே வைக்கிறார். காலையில் வந்த மனிதன் விட்டுச் சென்ற பொருளைத்தான் அவர் தூக்கி மேலே வைக்கிறார் என நாங்கள் நம்புகிறோம்.

அதை மேலே வைத்த பானி பயத்தோடு அதிர்ச்சியடைகிறார். அவர் பார்த்ததை உதவியாளரிடம் தெரிவிக்க, இருவரும் வந்து பார்ப்பது தெரிகிறது. அதன் பிறகு வந்து அத் தேவாலய பங்கு தந்தையிடம் தெரிவிக்கிறார். அதன்பின்னரே தேவாலய பங்கு தந்தை போலீசாருக்கு அறிவிக்கிறார்.

பானி குண்டை வைத்திருந்தால் அதை தொட்டிருப்பாரா? அல்லது எடுத்து எடுத்து மேலே வைத்திருப்பாரா? காவல்துறை பொய் சொல்கிறது!

போலீஸ் சொன்ன கதை உண்மைக்குப் புறம்பானது. குண்டை கொண்டு வந்தது யார் என ஆராயாமல் போலீஸ் துடைப்பத்தால் துப்பரவு செய்யும் ஒருவரை பிடித்து உள்ளே போட்டுள்ளது. போலீசாருக்கு உண்மையை வெளிப்படுத்த எந்த ஆர்வமும் இல்லை.

உண்மையைத் தேடுவதை விட, கதை புனைவதே மேல் என்று செயல்படுகிறார்கள். காவல்துறையின் இந்த நடவடிக்கையை நாங்கள் மறுக்கிறோம். இதன் பின்னணியில் அப்பாவி மக்களை பலிகடா ஆக்க சதி நடக்கிறது. நம் வரலாற்றில் காவல்துறை செய்ததை பார்க்கும் போது, ​​இப்படித்தான் யோசிகத் தோன்றுகிறது.

காவல்துறை ஊடகப் பேச்சாளர்கள் மற்றும் அதிகாரிகள் முதலில் நேர்மையாக இருக்க வேண்டும். அரசியல் தலைவர்களுக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்படக் கூடாது. இதை நான் ஒரு சதியாகவே பார்க்கிறேன். கத்தோலிக்க திருச்சபையை மிரட்டும் முயற்சியாகவே நான் பார்க்கிறேன்.

எனவே தயவு செய்து பொய் சொல்லாதீர்கள். பொய் சொல்வதாக இருந்தால் அந்த யூனிஃபார்மை கழட்டி விட்டு வீட்டுக்கு போங்க. ஏனென்றால் நேர்மையாக காவல்துறையில் வேலை செய்ய முடியாவிட்டால் அந்த சீருடை பயனற்றது என்றார் பேராயர் மல்கம் ரஞ்சித்.

கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற கைக்குண்டு சம்பவம் தொடர்பில் தேவாலய ஊழியர் உட்பட 4 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் 13 வயது குழந்தையும் சம்பந்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த வழக்கை இன்று நீதிமன்றத்தில் அறிவித்தனர்.

இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, ​​பொலிஸாரால் தவறவிடப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை கர்தினால் வெளியிட்டார்.

இன்று காலை 9.52 மணியளவில் சந்தேகத்திற்கிடமான நபர் வந்த சிசிடிவி காட்சிகள்,

Leave A Reply

Your email address will not be published.