இடிபாடுகளுக்கு மத்தியில் ஒரு கையில் தொலைபேசி, மறுகையில் 3 பச்சிளம் குழந்தைகளுடன் நின்றுகொண்டிருந்த தாதி

பெய்ரூட்டின் விபத்து இடம்பெற்ற பகுதிக்கு அருகில் இருந்த வைத்தியசாலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 3 பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றிய தாதி ஒருவரின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

பெய்ரூட் விபத்து நடந்த சில நிமிடங்களில் உள்ளூர் புகைப்பட கலைஞரான பிலால் ஜோவிஸ் தனது கேமராவை எடுத்துக்கொண்டு விபத்து தொடர்பான புகைப்படங்களை எடுப்பதற்காக அஷ்ரஃபிஹா மாவட்டத்திற்கு சென்றார்.

அங்கு விபத்து தொடர்பான புகைப்படங்களை எடுத்துவிட்டு அம்மாவட்டத்தில் உள்ள அல் ரோவ்ம் வைத்தியசாலைக்கு சென்றார்.

வைத்தியசாலைக்குள் சென்ற பிலால் அங்கு ஒரு பெண் தாதி தனது ஒரு கைகளில் 3 பச்சிளம் குழந்தைகளை வைத்துக்கொண்டு மறுகையில் தொலைபேசியில் அவசர உதவிக்காக அழைப்பு விடுத்துக்கொண்டிருந்தார்.

வெடிவிபத்து காரணமாக அந்த வைத்தியசாலை கட்டிடம் இடிந்ததனை அடுத்து 4 தாதியர்கள், 12 நோயாளிகள் உள்பட மொத்தம் 18 பேர் உயிரிழந்திருந்தனர்.

வெடிவிபத்தில் காயமடைந்த பலரும் ரத்தக்காயங்களுடன் அந்த தாதியரை சுற்றியிருந்தனர். உயிரிழந்தவர்களின் உடலும் அந்த தாதியை சுற்றிக்கிடந்தது.

ஆனால், அந்த தாதி தனது கையில் உள்ள குழந்தைகளுக்கு எதுவும் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தோடும், மன உறுதியோடும் அருகில் உள்ள வைத்தியசாலையை தொடர்பு கொண்டு உதவிபெற முயற்சித்துக்கொண்டிருந்தார்.

இதைபார்த்த பிலால் ஒரு கையில் 3 பச்சிளம் குழந்தைகளை வைத்துக்கொண்டு மறு கையில் தொலைபேசியை வைத்துக்கொண்டிருந்த அந்த தாதியை தனது கேமரா மூலம் புகைப்படம் எடுத்தார்.
பின்னர் அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

வெடிவிபத்து சம்பவத்தால் மருத்துவமனை இடிந்து விழும் சமயத்திலும் குழந்தையை காப்பாற்றும் நோக்கத்தோடு செயல்பட்ட தாதியின் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Comments are closed.