2021 உலகளாவிய ஊழல் குறியீடு: இந்தியா முன்னேற்றம் – பாகிஸ்தானுக்கு கடும் சரிவு..

ஜெர்மனியின் பெர்லினை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் Transparency International நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய ஊழல் குறியீடு பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி, 2021ம் ஆண்டுக்கான பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

லஞ்சம், பொது நிதியை திசை திருப்புதல், விளைவுகளைச் சந்திக்காமல் அதிகாரிகள் தங்கள் அரசு அலுவலகத்தை தனிப்பட்ட லாபத்திற்காகப் பயன்படுத்துவது, நிர்வாகத்தில் வாரிசுகளை நியமிப்பது, லஞ்சம் மற்றும் ஊழல் வழக்குகளைப் புகாரளிக்கும் நபர்களுக்கு சட்டப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை மையமாக கொண்டு 0 முதல் 100 வரையிலான மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. 0 மதிப்பெண்கள் என்பது அதிக ஊழல்மிக்கது எனவும் 100 மதிப்பெண்கள் என்பது ஊழலற்ற நிலையை எடுத்துரைப்பதாகவும் இருக்கிறது.

180 நாடுகளை உள்ளடக்கிய 2021ம் ஆண்டுக்கான உலகளாவிய ஊழல் குறியீடு பட்டியலில், 40 மதிப்பெண்ணுடன் இந்தியா 85வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டில் 86வது இடத்தில் இருந்த இந்தியா ஒரு இடம் முன்னேறியிருப்பது கவனிக்கத்தக்கது.

கவலையில் இம்ரான் கான்:

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான், ஊழல் குறியீட்டில் மோசமான சரிவை சந்தித்திருக்கிறது. 28/100 மதிப்பெண்ணுடன் பாகிஸ்தான் 140வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டுக்கு பிறகு இது பாகிஸ்தானுக்கு மோசமான சரிவாக சொல்லப்படுகிறது. கடந்த 2020ம் ஆண்டுக்கான பட்டியலில் பாகிஸ்தான் 124வது இடத்தில் இருந்தது. பாகிஸ்தானின் இந்த சரிவு இம்ரான் கானுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆட்சிக்கு வரும் முன்னதாக அவர் ஊழல் குறியீட்டை சுட்டிக்காட்டி முந்தைய அரசை விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, லக்சம்பர்க், ஜெர்மனி போன்ற நாடுகள் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளன. இங்கிலாந்து 11வது இடத்தை பிடித்திருக்கிறது. ஹாங்காங் 76 மதிப்பெண்ணுடன் 12வது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்கா 27வது இடத்தை பிடித்துள்ளது.

வங்கதேசம் 147வது (26) இடத்தையும், இலங்கை 102வது (37) இடத்தையும், சீனா 45 மதிப்பெண்களும் பெற்றுள்ளன. ஆப்கானிஸ்தான், வட கொரியா, சிரியா, ஏமன், சோமாலியா போன்ற நாடுகள் கடைசி இடங்களை பிடித்திருக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.