ஒலிம்பிக் தொடக்க விழாவுக்கு முன்பாக இருநாட்டு தலைவர்களும் பெய்ஜிங்கில் நேரில் சந்திப்பு.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க தயாராகி வருவதாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், ரஷ்ய அதிபர் புதின் நேற்று சீனாவுக்கு சென்று அந்நாட்டின் அதிபர் ஜின்பிங்கை நேரில் சந்தித்து பேசினார்.

சீன அதிபர் ஜின்பிங் கடந்த 2 ஆண்டுகளில் வெளிநாட்டு தலைவர் ஒருவருடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்தியது இதுவே முதல் முறையாகும். சீனாவில் கொரோனா பரவ தொடங்கியதற்கு பிறகு ஜின்பிங் நாட்டை விட்டு வெளியே செல்லவில்லை. அதேபோல் எந்த வெளிநாட்டு தலைவரும் சீனா வரவில்லை.

ஆனால் தற்போது சீனா தலைநகர் பெய்ஜிங்கில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டு தலைவர்கள் பலரும் நேற்று சீனா சென்றனர். அவர்களில் புதினும் ஒருவர்.

ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவுக்கு முன்பாக இருநாட்டு தலைவர்களும் பெய்ஜிங்கில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது, உக்ரைன் பிரச்சினை, கொரோனோ தொற்று உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து தலைவர்கள் விவாதித்தனர்.

இந்த சந்திப்புக்கு பின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த புதின், “ரஷ்யாவும் சீனாவும் கண்ணியமான உறவுக்கு எடுத்துக்காட்டு. சீனாவுடனான ரஷ்யாவின் உறவுகள் நட்பு மற்றும் மூலோபாய கூட்டாண்மையின் பாதையில் படிப்படியாக வளர்ந்து வருகின்றன.

ஜின்பிங்கை நான் நீண்ட காலமாக அறிவேன். நாங்கள் இருவரும் உலகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பல பொதுவான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் நல்ல நண்பர்கள் மற்றும் அரசியல்வாதிகள். நாங்கள் எப்போதும் நெருக்கமான தொடர்பை பேணி வருகிறோம்” என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.