உக்ரைனுக்கு 80 டன் ஆயுதங்கள் அனுப்பிய அமெரிக்கா; தொடரும் பதற்ற நிலை.

ரஷியா மற்றும் அதன் அண்டை நாடான உக்ரைனுக்கு இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை நீடித்து வருகிறது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014ம் ஆண்டு ரஷியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.

கடந்த ஆண்டு நவம்பர் முதல் உக்ரைன் எல்லையில் ரஷியா தனது படைகளை குவித்து வருகிறது. 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களையும் உக்ரைன் எல்லையில் ரஷியா குவித்துள்ளது. இதனால், உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருவதால் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நேட்டோ, மேற்கத்திய கூட்டணி இணைந்து அட்ரியாடிக் கடல் பகுதியில் ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதே நேரத்தில் துருக்கியின் தென்பகுதியில் பயிற்சிகளை மேற்கொள்ள ரஷ்யாவின் போர்க்கப்பல்கள் போஸ்போரஸ் நீர்வழித்தடத்திற்கு இரவு வேளைகளில் செல்கின்றன.

மேலும் உக்ரைன் மீது முழுமையாக படையெடுப்பதற்கு தேவையான ராணுவ படைகளில் 70 சதவீதம் அளவுக்கு ரஷ்யா திரட்டியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் உக்ரைன் மீது படையெடுக்கும் எண்ணம் இல்லை என ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது.

ஆனால் ரஷ்யாவின் கூற்றை நம்ப நாங்கள் தயாராக இல்லை என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி, ரஷ்யாவின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எங்களால் கட்டுப்படுத்த முடியாது. ரஷ்ய அதிபர் புதின் என்ன செய்வார் என்ற முன்னறிவிப்பு எதுவும் எங்களிடம் இல்லை. ரஷ்யாவின் கூற்றை நம்ப நாங்கள் தயாராக இல்லை. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் மிகப்பெரிய பின் விளைவுகள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஒருபுறம் அண்டை நாடான உக்ரைன் மீது படையெடுக்கவில்லை என பல முறை ரஷ்யா மறுப்பு தெரிவித்து வந்தபோதிலும், எல்லை பகுதியில் படைகளை குவித்து வருவது இருதரப்பிலும் பதற்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு மந்திரி ஒலெக்சீ ரெஜ்னிகோவ் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவில் இருந்து மொத்தம் 10 விமானங்கள் உக்ரைனை வந்தடைந்து உள்ளன. ஒரே நாளில் 2 விமானங்கள் வந்துள்ளன. இந்த 2 விமானங்களில், உக்ரைனுக்கு மொத்தம் 80 டன் ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளார்.

ஒட்டு மொத்த அளவில் உக்ரைனுக்கு 45 விமானங்கள் வரை ஆயுதங்களை அனுப்பி வைக்க அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது. இதனால், ரஷ்யா, உக்ரைன் இடையேயான எல்லை விவகாரம் தீவிரமடைந்து மற்ற நாடுகளையும் கவலை கொள்ள செய்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.