உக்ரைன் விவகாரம்: புதினுடன் ஜோ பைடன் இன்று பேச்சுவார்த்தை.

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை உள்ளது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது.

உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் ரஷியா தனது படைகளை குவித்து வருகிறது. 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களையும் உக்ரைன் எல்லையில் ரஷியா குவித்துள்ளது. இதனால், உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ரஷியா படையெடுக்கும்பட்சத்தில் அமெரிக்கா, நேட்டோ படைகள் உக்ரைனுக்கும் ஆதரவளிக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பில் உள்ள சில நாடுகள் ஆயுதங்களை அனுப்பி வைத்துள்ளன.

இதனால், ரஷியா – உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. போர் பதற்றத்தை தணிக்க பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.

அதேவேளை உக்ரைன் மீது படையெடுக்கும் எண்ணமில்லை என ரஷியா தெரிவித்து வருகிறது. ஆனால், பெலாரசுடன் இணைந்து ரஷியா போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையில், சீனாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் நிறைவடைந்த உடன் உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். வான்வெளி தாக்குதல் மூலம் படையெடுப்பு நடைபெறும் என வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று (சனிக்கிழமை) பேச்சுவார்த்தை நடத்துகிறார். புதினை இன்று (சனிக்கிழமை) தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச உள்ள ஜோ பைடன் உக்ரைனில் போர் பதற்றத்தை தணிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி வேண்டுகோள் விடுக்க உள்ளார்.

உக்ரைன் விவகாரத்தில் இன்று ரஷிய அதிபர் புதினை, அமெரிக்க அதிபர் பைடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது உலக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.