கனடா, நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் தடுப்பூசிக்கு எதிராக வலுக்கும் போராட்டம்…!

கொரோனா கட்டாய தடுப்பூசிக்கு எதிராக கனடா, நியூசிலாந்து போன்ற பல நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவிலும் தடுப்பூசிக்கு எதிராக போராட்டங்கள் ஆரம்பமாகி உள்ளது.

கனடாவில் எல்லை கடந்து செல்லும் லாரி டிரைவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் என அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக லாரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ‘சுதந்திர அணிவகுப்பு’ என்கிற பெயரில் தலைநகர் ஒட்டாவாவில் தொடங்கிய இந்த போராட்டம் தற்போது நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது.

இதேபோல், நியூசிலாந்தின் வெலிங்டனில், நனைந்த மழையையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் “பீஹைவ்” பாராளுமன்றத்திற்கு அருகில் ஐந்தாவது நாளாக போராடிவருகின்றனர். எதிர்ப்பாளர்கள் தங்கள் டிரக்குகள், வேன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுடன் பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பல வீதிகளை ஆக்கிரமித்துத் தடுத்துள்ளனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியா தலைநகர் கான்பெர்ராவின் தெருக்களில் வெளியே கூடிய மக்கள், பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி நேற்று அணிவகுத்தனர், சிலர் தேசிய சட்டங்கள் தங்களுக்குப் பொருந்தாது என்றும் தெரிவிக்கும் பாதாகைகளை ஏந்தி இருந்தனர்.

மேலும் “உங்கள் சுதந்திரம் மற்றும் உரிமைகளுக்காகப் போராடுங்கள்” மற்றும் “கட்டாய மருந்துகள் வேண்டாம்” என்று எழுதப்பட்ட பதாகைகளைக் ஆர்ப்பாட்டக்காரர்கள் காட்டினர்.

10,000 பேர் வரை போராட்டக்காரர்கள் இருந்ததாகவும், அவர்கள் அமைதியான முறையில் போராடத்தை நடத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களில் 94% பேர் குறைந்தது இரண்டு கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர் என்று ஆஸ்திரேலியா அரசு கூறியுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் போன்ற சில ஆஸ்திரேலிய மாநிலங்கள் பப்கள், உணவகங்கள் அல்லது கடைகளுக்குள் நுழைவதற்கான தடுப்பூசிக்கான ஆதாரத் தேவைகளைத் தளர்த்தத் தொடங்கியுள்ளன.

இதுதொடர்பாக ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில், “தடுப்பூசி பிரச்சனைகள் தொடர்பான அவர்களின் கவலைகளை நான் புரிந்துகொள்கிறேன். அமைதியான முறையில் போராட்டக்காரர்கள் செயல்பட வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.