பிரித்தானியாவை தாக்கியது யூனிஸ் புயல்!

பிரிட்டனை யூனிஸ் புயல் தாக்கியதையடுத்து, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், பயண திட்டங்களை இரத்து செய்யுமாறும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

புயல் தாக்கியதையடுத்து பிரித்தானியாவில் பல்வேறு இடங்களிலும் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பாடசாலைகள் மற்றும் வணிகங்கள் மூடப்பட்டன. பஸ் மற்றும் ரயில் சேவைகள், விமானங்கள் மற்றும் படகுப் பயணங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

மீட்பு பணிகளுக்காக இராணுவம் தயார் நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மரத்தில் லொரி மோதியதில் 20 வயது மதிக்கத்தக்க ஒருவர் பலி

யூனிஸ் புயலின் போது இங்கிலாந்தில் மூன்றாவது மரணம் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஹாம்ப்ஷயரின் ஆல்டனில், பழைய ஓடிஹாம் வீதியில் விழுந்த மரத்தில் லொரி மோதியதில், 20 வயதுடைய ஒருவர் உயிரிழந்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் பெண் ஒருவர் பலி

புயல் காரணமாக வடக்கு லண்டனில் மரம் ஒன்று கார் மீது வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

30 வயதான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

உயிரிழந்த பெண் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நேற்று பிற்பகல் வீசிய புயலின் போது, நெதர்டன், மெர்சிசைட் என்ற இடத்தில் வாகனத்தின் கண்ணாடியில் குப்பைகள் விழுந்ததில் 50 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் போக்குவரத்து பாதிப்பு

புயல் காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளதுடன், ரயில் பாதைகள் தடைப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலங்கள் பல மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து விமான நிலையங்களில் புறப்பட வேண்டிய அல்லது தரையிறங்க வேண்டிய 430 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏழு ரயில் இயக்குநர்கள் அனைத்து சேவைகளையும் நிறுத்தியுள்ளனர்.

அதே நேரத்தில் தென்கிழக்கு லண்டனில் உள்ள ஒவ்வொரு பாதையிலும் மரங்கள் வீழ்ந்துள்ளன. வேல்ஸிற்கான போக்குவரத்து மற்றும் ரயில் சேவைகள் இன்று மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 200,000 வீடுகளுக்கு மின்சாரம் இல்லை

தற்போது நாடு முழுவதும் மொத்தம் 200,000 வீடுகளில் மின்சாரம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் செயலர் ஜார்ஜ் யூஸ்டிஸ் கூறுகையில், ஏற்கனவே 250,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது, மீதமுள்ள வீடுகளுக்கு மின் இணைப்புகளை வழங்க குழுக்கள் கடுமையாக உழைத்து வருகின்றன.

புதுப்பிக்கப்பட்ட வானிலை எச்சரிக்கை

யூனிஸ் புயல் வட கடலை நோக்கிச் சென்றாலும், இங்கிலாந்தின் சில பகுதிகளில் வானிலை எச்சரிக்கைகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் எச்சரிக்கை 1 இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளுக்கு சனிக்கிழமை காலை வரை உறைபனி வெப்பநிலை மற்றும் பனிக்கட்டி அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் எச்சரிக்கை 2 மண்டலங்களுக்குள் இருப்பவர்கள் கடுமையான பனி மற்றும் பலத்த காற்றின் அபாயம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் எச்சரிக்கை 3ன் கீழ் உள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு பலத்த காற்று மாலை வரை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இங்கிலாந்தின் தெற்கில் குறிப்பிடத்தக்க பாதிப்புகள் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் வலுவான காற்று காரணமாக இன்று மாலை வரை தற்போது அம்பர் எச்சரிக்கை இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கார் மீது வீழந்த மரம் – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

வில்ட்ஷயர், பிராட்ஃபோர்ட்-ஆன்-அவான் என்ற இடத்தில் கார் மீது மரம் வீழ்ந்ததில் மூன்று பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவசரகால பணியாளர்கள் 12.20 மணியளவில் குழுவை மீட்டனர். சாரதியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த வீதி சில மணி நேரங்களுக்கு மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின் நிலைய கோபுரம் பாதிப்பு

கென்ட் நகரில் மின் நிலைய கோபுரம் பாதிப்பு கென்ட்டில் உள்ள மின் நிலையத்தில் உள்ள ஒரு கோபுரம் யூனிஸ் புயலின் போது சேதமடைந்து இடிந்து விழுந்ததாகத் தெரிகிறது.

எனினும், உயிர் சேதம் ஏற்படவில்லையெனவும், உள்ளூர் மக்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லையெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. “தளத்தில் சில சேதங்களை ஏற்படுத்தியுள்ளது மற்றும் முன்னெச்சரிக்கையாக மின் நிலையம் தற்காலிகமாக ஆஃப்லைனில் விடப்பட்டுள்ளதாக” அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.