பஸிலின் ஜனாதிபதிக் கனவை நாமே தகர்த்தோம் – ஒப்புக்கொண்டார் முன்னாள் அமைச்சர் விமல்.

“2019 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட பஸில் ராஜபக்ச திட்டமிட்டிருந்தார். அதனை நாம் தடுத்துநிறுத்தினோம். அதனால்தான் அவர் எம்முடன் மோதினார். இன்று எம்மை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் நாம் கவலை அடையவில்லை.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அரச பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து கொழும்பில் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே விமல் வீரவன்ச மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பஸில் ராஜபக்ச கோரினார். அதனை மஹிந்த வழங்கவில்லை. அதன்பின்னர் தனிக்கட்சியை உருவாக்கினார்.

2019 ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்தே அவர் செயற்பட்டார். அதற்கு நாம் இடமளிக்கவில்லை. மஹிந்த இல்லாவிட்டால், கோட்டாபய எனத் திட்டவட்டமாக அறிவித்தோம். அதனால் பஸிலின் கனவு தகர்ந்தது.

அதன்பின்னர் கிழக்குத் துறைமுக விவகாரம், யுகதனவி, 20 ஆவது திருத்தச் சட்டம் போன்றவற்றின்போதும் பஸிலின் முடிவுக்கு நாம் சவாலாக இருந்தோம்.

எங்களை வெளியேற்றாவிட்டால், அமைச்சரவைக்கு வரமாட்டேன் என அவர் கூறியுள்ளார். இதனால்தான் ஜனாதிபதி எம்மை நீக்கியுள்ளார். அதனால் நாம் கவலைப்படவில்லை. மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் செயற்பட்டுள்ளோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.