மக்களைத் தவறாக வழிநடத்தியவர்களை எமது கட்சியில் இணைக்கத் தயாரில்லை.

“விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்களின் செயற்பாடு எமக்குத் தெரியும். அவர்கள் மக்களைத் தவறாக வழிநடத்தினர். அப்படியானவர்களை எமது கட்சியில் இணைத்துக்கொள்ளத் தயாரில்லை.”

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

“நாட்டை மீட்டெடுத்து, மக்களைப் பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது. எனவே, மக்கள் ஆணை வழங்கினால் ஆட்சியைப் பொறுப்பேற்று, சிறந்த நிர்வாகத்தை வழங்குவோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

ஐக்கிய மக்கள் சக்திக்கு தேசிய வேலைத்திட்டமொன்று உள்ளது. அரசியல், பொருளாதாரம் மற்றும் மக்களை பாதுகாக்கும் திட்டங்கள் எம்மிடம் உள்ளன. தற்போது பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. அதற்கான திட்டங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. பல தரப்புகளிடம் இருந்து ஆலோசனைகளும் பெறப்பட்டுள்ளன.

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்களை நீக்கியமை அரசின் முடிவாகும். மஹிந்த சிந்தனை உட்பட அரசின் திட்டங்களின் பின்னணியில் இவர்களே இருந்தனர். எனவே, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு அவர்களும் பொறுப்புக்கூறவேண்டும். அவர்கள் அரசுக்குள் தொடர்ந்தும் இருந்து முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ளவே முற்படுகின்றனர்.

அமைச்சரவையை மாற்றுவதால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. இந்த அரசில் உள்ளவர்கள் பலவீனமானவர்கள் என்பதாலேயே அடிக்கடி மாற்றங்கள் இடம்பெறுகின்றன.

அதேவேளை, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்களின் செயற்பாடு எமக்குத் தெரியும். அவர்கள் மக்களைத் தவறாக வழிநடத்தினர். அப்படியானவர்களை இணைத்துக்கொள்வது பற்றி சந்திக்க வேண்டிவரும். அரசில் இருந்து வெளியேறுபவர்களை எல்லாம் இணைத்துக்கொள்ளும் அளவுக்கு எமது கட்சி பலவீனம் அடையவில்லை – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.