அத்தியாவசியமற்ற பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை அமுல்படுத்த சிக்கல்.

அத்தியாவசியமற்றவை எனக் கருதப்படும் 367 பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கு நிதியமைச்சு எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் தமயந்தி எஸ் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

பணிகளை அமுல்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும் என்பதால், எந்தவொரு தரப்பினருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் செயற்படத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சில இறக்குமதியாளர்கள் ஏற்கனவே தடைசெய்யப்பட்ட இறக்குமதிகளை முன்பதிவு செய்துள்ளனர். மற்றவர்கள் முன்பதிவு செய்த பொருட்களுக்கு ஏற்கனவே பணம் செலுத்தியுள்ளனர். சில இறக்குமதியாளர்களின் இறக்குமதி பொருட்களை ஏற்றிச் செல்லும் கொள்கலன்கள் இன்னும் துறைமுகங்களுக்கு வந்துகொண்டிருக்கின்றன. இவ்வாறான நிலையில் இந்த இறக்குமதி கட்டுப்பாடுகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில் மேலதிக திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் தமயந்தி எஸ் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், 367 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், பொருட்களை முன்பதிவு செய்து அவற்றுக்காக பணம் செலுத்திய அல்லது ஏற்கனவே துறைமுகங்களுக்கு பொருட்களை கொண்டு வந்த இறக்குமதியாளர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் தீர்வுகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

நாட்டில் டொலர் தட்டுபாடு நிலவுவதால், இத்தகைய அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனவே, ஏற்கனவே துறைமுகங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்களை வெளியிட இறக்குமதியாளர்கள் அனுமதித்தால், சரியான காரணம் இருந்தால் மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அத்தியாவசியமற்றவை என கருதப்படும் 367 பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கு நிதியமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் நேற்று முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் என இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் தமயந்தி எஸ் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

பழங்கள், பால் பொருட்கள், சொக்லேட், நூடுல்ஸ் மற்றும் மாவு, டயர்கள், மதுபானம் மற்றும் புகையிலை பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மின் சாதனங்கள் போன்ற அத்தியாவசியமற்ற 367 பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை நிதியமைச்சு கடந்த 9ஆம் திகதி வெளியிட்டது.

ஏதேனும் காரணங்களுக்காக பொருட்கள் இறக்குமதி செய்யப்படுமாயின், நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகத்திடம் விசேட உரிமம் பெறப்பட வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.