அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குமாறு, தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டறிக்கை!

“நாட்டில் இன்று கொழுந்து விட்டெரியும் அமைதிக் குலைவுக்கு முடிவு கட்டவும், பொருளாதார நெருக்கடியைக் கட்டுப்படுத்தி மக்களின் அன்றாட வாழ்வை படிப்படியாகவும் விரைவாகவும் சகஜ நிலைக்குக் கொண்டு வரவும் தேவைப்படுவதெல்லாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையை நீக்கி, அதற்குப் பதிலாக நாடாளுமன்ற ஆட்சி முறைக்கு நாடு திரும்பிச் செல்வதே ஆகும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாக விடுத்துள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் எம்.பி., ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தர்த்தன் எம்.பி., ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் க. சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறீகாந்தா ஆகியோரின் கையொப்பங்களுடன் வெளியிடப்பட்டுள்ள அந்தக் கூட்டறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“இலங்கைத் தீவு தனது வரலாற்றில் சந்தித்திராத பாரிய பொருளாதாரப் பிரச்சினையால் மக்களின் அன்றாட வாழ்வே ஸ்தம்பிதம் அடைந்து விடக் கூடிய ஆபத்தான நிலைமை காரணமாக மிகத் தீவிரமானதோர் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சாதாரணப் பொதமக்கள் பல்லாயிரக்கணக்கில் தாமாகவே வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதையும், சுகாதாரத்துறையினர் மற்றும் கல்வித்துறை சார்ந்தோர் உள்ளடங்கலாக சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் இந்த அரசியல் பொருளாதார நெருக்கடிக்கு உடனடியான தீர்வு கோரிப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையை ஜனாதிபதியும் அரசும் மற்றும் சகல அரசியல் கட்சிகளும் பொறுப்புணர்வோடு உரிய முறையில் கையாண்டு, அவசியமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்காவிடில் முழு நாடும் சீர்குலைந்து அராஜகம் தலைவிரித்து ஆடக் கூடிய மாபெரும் ஆபத்து உருவாகிக் கொண்டிருக்கின்றது.

தீ பரவுவதற்கு முன்னர் அதனைக் கட்டுப்படுத்தி முற்றிலுமாக அணைப்பதற்கான நடவடிக்கைகளே இப்போது உடனடியான தேவை என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர்.

இந்த நெருக்கடி நிலைக்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும்கூட, அடிப்படையான காரணம் தனி ஒரு மனிதரின் கையில் நாட்டின் ஆட்சி அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருக்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையே என்பதில் பரந்துபட்டதும் தீவிரமானதுமான கருத்தோட்டம் எழுந்துள்ளது.

இன்று கொழுந்து விட்டெரியும் அமைதிக் குலைவுக்கு முடிவு கட்டவும், பொருளாதார நெருக்கடியைக் கட்டுப்படுத்தி மக்களின் அன்றாட வாழ்வை படிப்படியாகவும் விரைவாகவும் சகஜ நிலைக்குக் கொண்டு வரவும் தேவைப்படுவதெல்லாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை நீக்கி, அதற்குப் பதிலாக நாடாளுமன்ற ஆட்சி முறைக்கு நாடு திரும்பிச் செல்வதே ஆகும்.

எனவேதான், இந்த முடிவு இலங்கையின் தேசிய மட்டத்தில் உடனடியாக மேற்கொள்ளப்படுவதற்கு ஏதுவாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளும் ஏகோபித்து உரிய தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் எனப் பகிரங்கமாக நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

இன்றைய நிலையில் பொறுப்புணர்வு மிக்கவர்களாக சகல அரசியல் தரப்புக்களும் செயற்பட்டு, இந்த முடிவுக்கு வந்து, அதனை நடைமுறைப்படுத்திட உரிய நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுப்பதே நாடு எதிர்நோக்கி நிற்கும் மிகப் பாரிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, சரியான திசையில் எடுத்து வைக்கப்படும் முதலாவது அடியாக இருக்கும் என்பதையும் அழுத்திக் கூற விரும்புகின்றோம்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.