சிலாபத்தில் கலவர சூழல் : ஜனாதிபதிக்கு ஆதரவான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கல் வீச்சு (வீடியோ)

சிலாபம் நகரில் , இன்று (11) பிற்பகல் அரசாங்கத்திற்கு ஆதரவான மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக சூடுபிடித்தது.

கட்சி சார்பற்ற குழுவொன்று அரசாங்கத்திற்கு எதிராக சிலாபம் நகரின் மத்தியில் எதிர்ப்பு பேரணியை ஆரம்பித்திருந்தது.

சம்பவ இடத்திற்கு வந்த சிலாபம் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் ரோஹன கமகே, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போராட்டம் நடத்தப்பட வேண்டுமென தெரிவித்தார்.

இதேவேளை, அரசாங்கத்திற்கு ஆதரவாக மற்றுமொரு குழு சிலாபத்திற்கு வந்ததையடுத்து நிலைமை தீவிரமடைந்தது.

மேலும், அரசுக்கு ஆதரவான குழுவினர் அணிவகுத்துச் சென்றபோது, ​​எதிர்கட்சியினர் அவர்களை நோக்கி கற்களை வீசினர்.

இதற்கிடையில், அரச தரப்பு அரசியல்வாதிகளுக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் பல வாகனங்கள் நகரின் ஊடாக சென்று கொண்டிருந்தன.

அந்த வாகனங்கள் மீதும் எதிர்க்கட்சியினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் அரசு சார்பு குழுவினர் நகரை விட்டு அகல வேண்டிய நிலை ஏற்பட்டது.

பல சந்தர்ப்பங்களில், கோட்டா அரசுக்கு எதிரான குழுக்கள் பொலிஸ் தடைகளை உடைத்து முன்னேற முயன்றன.

இந்தக் குழுவைக் கட்டுப்படுத்துவதற்காக கலகக் கட்டுப்பாட்டுப் பிரிவு உள்ளிட்ட மேலதிக குழுக்கள் சிலாபத்துக்கு வரவழைக்கப்பட்டன.

இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராக பெரும் எண்ணிக்கையிலான கத்தோலிக்க மதகுருமார்களும் , சிலாபத்தில் பேரணியாகச் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கத்தோலிக்க மதகுருமார் ஊர்வலம் சென்றவர்கயோடு , அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களும் கலந்து கொண்டனர்.

பின்னர் சிலாபம் நகரின் மையப்பகுதியில் உள்ள தேவ மாதா சிலைக்கு முன்பாக சமய வழிபாடுகளை நடத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.