நாடு முழுவதும் கொரோனா பரவல் ஒரேநாளில் 66% அதிகரிப்பு : கலெக்டர்களுக்கு மருத்துவ செயலாளர் ராதாகிருஷ்ணன் முக்கிய கடிதம்

டெல்லி, மகாராஷ்ட்ரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றன. இந்தியாவின் ஒட்டுமொத்த பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் பல்வேறு மாநிலங்களில் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு, மற்ற மாநிலங்களுக்கு எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்ததியுள்ளது.

ஏப்ரல் 17ம் தேதி நாட்டில் 1,150 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டது. ஏப்ரல் 18ம் தேதி 2,183 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. ஏப்ரல் 19ம் தேதியான நேற்று 1,247 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று 2,067 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி ஒரேநாளில் 66% ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்காத வகையில் மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்காத வகையில் மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய கொரோனா பாதிப்புகளை கண்காணிக்கவும், தொற்று பரவுவதை குறைக்க தேவையான கட்டுப்பாட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, தடுப்பூசி செலுத்துவது போன்ற தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். முதியவர்கள் மற்றும் இணைநோய் உள்ளவர்களை கண்டறிந்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி மாணவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டம் போன்றவற்றை தீவிரப்படுத்த வேண்டும்.

அனைத்து மாவட்ட மருத்துவக்கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் மருத்துவக் கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.