ரஷ்ய விமானம் தடுப்பு விவகாரத்தால் பொருளாதாரத்துக்குப் பெரும் பாதிப்பு சஜித் பகிரங்க எச்சரிக்கை.

“விமானம் தடுத்துவைப்பு விவகாரத்தால் ரஷ்யாவுடன் வீண் பிரச்சினை ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் எமது நாட்டுப் பொருளாதாரத்துக்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அரசின் இயலாமையும் வெளிப்பட்டுள்ளது.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“ரஷ்யாவின் விமானமொன்று, வணிக நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பை நான் விமர்சிக்கப் போவதில்லை. அதற்கான தார்மீக உரிமையும் எனக்குக் கிடையாது.

ஆனால், இந்தப் பிரச்சினை சர்வதேசம் வரை சென்று, இராஜதந்திர நெருக்கடியாக மாறுவதற்கு முன்னர் அதனைத் தீர்த்திருக்கலாம். ஆனால், தாங்கள்தான் சர்வதேச சாம்பவான்கள் எனக் கூறிக்கொள்பவர்கள், அதனைச் செய்யவில்லை.

ரஷ்யாவில் இருந்துதான் கூடுதல் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அங்கிருந்து விமானம் வருவது தடைப்பட்டுள்ளது. தேயிலை ஏற்றுமதியும் அந்த நாட்டை தங்கியுள்ளது. எனவே, எமது நாட்டுக்குத்தான் பிரச்சினை ஏற்படப் போகின்றது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.