இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக வடக்குக்கு கடத்தப்படும் எரிபொருள்

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக வடக்கு கடற்கரைக்கு மீன்பிடி படகுகளை பயன்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்யும் கடத்தல்காரர்களே எரிபொருளை கடத்துவதை வடமாகாண பாதுகாப்பு தரப்பினர் கண்டுபிடித்துள்ளனர்.

கிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாச்சிக்குடா பகுதியில் இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3600 லீற்றர் மண்ணெண்ணெய்யுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (07) கைது செய்யப்பட்டதாக முழங்காவில் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் யாழ்.பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது யாழ்ப்பாணத்தில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 லீற்றர் டீசலுடன் நேற்று மாலை (07) சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மண்ணெண்ணெய் மற்றும் டீசலை ஒரு லீற்றர் 600 முதல் 1000 ரூபா வரை விற்பனை செய்ய கடத்தல்காரர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அதன் பெறுமதி 30 இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நாச்சிக்குடா மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால், கடத்தல்காரர்கள் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக எரிபொருளை கொண்டு வந்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் அபாயம் உள்ளதால், வடக்கிலும் பாதுகாப்பை பலப்படுத்த கடற்படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.