ஊழல், மோசடியற்ற ஒருவர் ஜனாதிபதியாக வேண்டும்! – இராதாகிருஷ்ணன் எம்.பி. வலியுறுத்து.

“இன, மத சாயமற்ற – மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசு உதயமாக வேண்டும். ஊழல், மோசடி அற்ற ஒருவர் அரச தலைவராக வேண்டும். அதற்கான சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.”

இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“9ஆம் திகதி என்பது, இலங்கையில் மாற்றங்கள் நிகழும் நாளாக மாறியுள்ளது. மே 9 மஹிந்த பதவி விலகினார். ஜூன் 9 பஸில் பதவியை விட்டுப் பறந்தார். ஜூலை 9 பதவி விலகும் அறிவிப்பை ஜனாதிபதி கோட்டா விடுத்தார்.

அதுமட்டுமல்ல பௌத்த பிக்குகளால் முன்னிலைப்படுத்தப்பட்ட ஜனாதிபதி, பௌத்த தேரர்களாலும், வாக்களித்த மக்களாலும் விரட்டியடிக்கப்பட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது. இலங்கை அரசியல் வரலாற்றில் இது முக்கிய திருப்புமுனையாகும்.

மக்களுக்குத் தகவல் அறியும் உரிமை இருக்கின்றது. அந்தப் பணியை ஊடகங்கள் ஆற்றுகின்றன. ஜனாதிபதி பதவி விலகுவதில் ஊடகங்களின் பங்கும் உள்ளது. நல்ல வேலையை அவை செய்துள்ளன. அப்படி இருக்கையில் போராட்டக்களத்தில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன். பாதுகாப்பு வழங்க வேண்டியவர்களே, தாக்குதல் நடத்தியமை கவலைக்குரிய விடயமாகும்.

மஹிந்த ஆட்சியில் ஊடக அடக்குமுறை தலைவிரித்தாடியது. நியூஸ்பெஸ்ட் ஊடகம் அதிக அச்சுறுத்தலை எதிர்கொண்டிருந்தது. தற்போதும் அந்நிறுவனத்தின் ஊடகர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இது ஜனநாயகத்துக்கு விழுந்த அடியாகும்.

அடுத்து வரும் நாட்களில் அரசியல் மாற்றங்கள் இடம்பெறவுள்ளன. நாடாளுமன்றமும் அவசரமாகக் கூடும். ஊழல், மோசடி அற்ற ஒருவர் அரச தலைவராக வேண்டும். அனைவரும் ஒன்றுபட வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.