மக்கள் எழுச்சியின் முன் ஆயுத பலம் வெறும் தூசு.

“மக்கள் எழுச்சியின் பலத்தின் முன்பாக ஆயுத பலம் தோற்றுப்போகும். இதனால்தான் ராஜபக்சக்கள் தப்பியோட நேர்ந்தது. இதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உணர்ந்துகொள்ள வேண்டும்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“காலிமுகத்திடலில் அமைதி வழியில் போராடிய போராட்டக்காரர்கள் மீது இராணுவத்தினர் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலுக்குப் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக்கூற வேண்டும். அதைவிடுத்து அவர், போராட்டக்காரர்கள் மீது பழிசுமத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை உடன் நிறுத்த வேண்டும்.

மக்கள் பலத்தை ஆயுத பலத்தால் ஒருபோதும் அடக்கவே முடியாது. இந்த மக்கள் பலம்தான் ராஜபக்சக்களை அதியுயர் பதவிகளிலிருந்து தூக்கியெறிந்தது. இதை ரணில் விக்கிரமசிங்க புரிந்துகொள்ள வேண்டும்.

ரணிலுக்கு எதிராகக் காலிமுகத்திடலில் போராடும் மக்களுக்கு எனது முழுமையான ஆதரவு தொடர்ந்தும் இருக்கும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.