அனைத்து தனியார் பஸ் சேவைகளும் யாழ். மாவட்டத்தில் இன்று ஸ்தம்பிதம்.

எரிபொருள் பெறுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக யாழ்ப்பாணம் மாவட்ட தனியார் பஸ்கள் உள்ளூர் மற்றும் வெளியூரில் இன்று சேவையில் ஈடுபடவில்லை.

யாழ். பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பஸ் கம்பனிகளின் இணைய அலுவலகத்தில் தனியார் பஸ் சங்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலுக்குப் பின்னர் யாழ். மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடியபோதும் எரிபொருளைப் பெறுவதற்கான முயற்சி தோல்வியிலேயே முடிந்தது.

சேவையில் ஈடுபட எரிபொருள் இல்லாததால் முழு தனியார் போக்குவரத்தும் இன்று ஸ்தம்பிதமடைந்துள்ளது. தூர பஸ் சேவையும் இடம்பெறவில்லை. பொதுமக்கள் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று யாழ் மாவட்ட பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பஸ் கம்பனிகளின் இணையத்தின் தலைவர் பொ.கெங்காதரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை போக்குவரத்துச் சபை சாலைகளில் தனியார் பஸ்கள் எரிபொருள் பெறும்போது பாரிய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. தனியார் பஸ்களுக்கு நேற்றும் எரிபொருள் வழங்கப்படவில்லை. இன்று சேவையில் ஈடுபட எரிபொருள் இல்லாததால் முழு தனியார் போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளது. தூர பஸ் சேவையும் இடம்பெறாது. பொதுமக்கள் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

யாழ். மாவட்ட செயலர் எரிபொருளைப் பெற்றுதத்ர முயற்சித்தபோதும் பலனளிக்கவில்லை. எரிபொருள் கிடைத்தால் தொடர்ந்தும் பயணிகள் சேவையில் ஈடுபடுவோம்” – என்றார்.

இதேவேளை, இன்று வடக்கு மாகாணத்துக்குட்பட்ட தூர பஸ்களும் சேவையில் ஈடுபடவில்லை என்று யாழ்ப்பாணம் மாவட்ட தனியார் தூர பஸ் சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி சஜிந்தன் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.