சர்வகட்சி அரசுக்குக் கூட்டமைப்பு ஆதரவு: சம்பந்தனின் நிலைப்பாட்டை வரவேற்கின்றது ரணில் அரசு.

“சர்வகட்சி அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ள கருத்தை அரசு என்ற ரீதியில் நாம் முழுமனதுடன் வரவேற்கின்றோம்.”

இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டிலுள்ள தேசிய பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வுகாண சர்வகட்சி அரசை அமைப்பதே ஒரே வழி என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ள கருத்து நியாயமானது – பாராட்டத்தக்கது.

சர்வகட்சி அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கும் என்று சம்பந்தன் தெரிவித்துள்ளமையை தற்போதைய அரசின் சார்பில் நான் மனதார வரவேற்கின்றேன்.

சம்பந்தன் கூறுவது போல் பொருளாதாரப் பிரச்சினை மட்டுமன்றி அரசியல் தீர்வு உள்ளிட்ட அனைத்துத் தேசிய பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண சர்வகட்சி அரசு நடவடிக்கை எடுக்கும். இதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாகவுள்ளார்.

எனவே, ஆளுந்தரப்பு – எதிர்த்தரப்பு என்ற வேறுபாடின்றி நாடாளுமன்றத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் சர்வகட்சி அரசு அமைய முழுமையான ஆதரவை வழங்க முன்வரவேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.