ஹன்ட்ரட் தொடரில் விளையாடும் வாய்ப்பினை இழந்த வனிந்து ஹஸரங்க.

இந்த ஆண்டுக்கான (2022) இங்கிலாந்தின் ”த ஹன்ட்ரட்” தொடரில் மென்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த வனிந்து ஹஸரங்க அந்த வாய்ப்பினை இழந்திருக்கின்றார்.

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) வனிந்து ஹஸரங்கவிற்கு ஹன்ட்ரட் தொடரில் விளையாடுவதற்கான ஆட்சேபனை இல்லா சான்றிதழை (NOC) வழங்க மறுத்ததனை அடுத்தே அவருக்கு இந்த தொடரில் ஆடும் வாய்ப்பு இல்லாமல் போயிருக்கின்றது.

இதேநேரம் வனிந்து ஹஸரங்க ஹன்ட்ரட் தொடரில் விளையாடும் வாய்ப்பினை இழந்ததனை அடுத்து அவருக்கு மென்சஸ்டர் ஒரிஜினல்ஸ் அணி வழங்கிய சுமார் 100,000 பவுண்டுகள் பெறுமதியான (இலங்கை நாணயப்படி சுமார் 43.5 மில்லியன் ரூபா) வீரர் ஒப்பந்தத்தினை பெறுவதும் இல்லாமல் செய்யப்பட்டிருக்கின்றது.

இலங்கை கிரிக்கெட் சபையின் சிரேஷ்ட அதிகாரியான ஏஷ்லி டி சில்வா வனிந்து ஹஸரங்கவினை ஆசியக் கிண்ண T20I தொடருக்கு உடல்நிலை மற்றும் உளநிலை அடிப்படையில் சிறந்த முறையில் தயார்படுத்தும் நோக்குடனேயே, அவருக்கு ஹன்ட்ரட் தொடரில் விளையாடும் சந்தர்ப்பத்தினை வழங்கவில்லை எனத் தெரிவித்திருக்கின்றார்.

இதேநேரம் அடுத்த ஆண்டுக்கான (2023) ஹன்ட்ரட் தொடரில் மென்சஸ்டர் ஒரிஜினல்ஸ் அணி தமக்கு விருப்பம் இருப்பின், வனிந்து ஹஸரங்கவினை அவர்களது அணியில் தொடரில் தக்கவைத்திருக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதேநேரம் வனிந்து ஹஸரங்கவின் பிரதியீட்டு வீரராக மென்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணி தென்னாபிரிக்க அணியின் அதிரடி துடுப்பாட்டவீரர் ட்ரிஸ்டான் ஸ்டேப்சினை ஒப்பந்தம் செய்திருக்கின்றது.
ஸ்டேப்ஸ் கடந்த வாரம் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான தொடரில் அபார ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.