தமிழகம் முழுவதும் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் உள்ளன? அறிக்கை தாக்கல் செய்ய அரசிற்கு நீதிமன்றம் உத்தரவு!

தமிழகம் முழுவதும் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களும், உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தகுந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் உடற்கல்வி வழங்கும் வகையில் விதிகளை வகுக்க உத்தரவிடக் கோரி மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த மருத்துவர் சுபாஷ் சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், உடற்கல்வி என்பது மாணவர்களின் மேம்பாட்ட்டுக்கு முக்கியமானது எனவும், தமிழகத்தில் எத்தனை பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளன?, எத்தனை பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளனர்? என்பன உள்ளிட்ட விவரங்களை வழங்கக் கோரி தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்ததாக குறிப்பிட்டுள்ளார்.ஆனால், இந்த தகவல்களை வழங்க மறுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு, தமிழகம் முழுவதும் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களும், உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 27க்கு தள்ளிவைத்தது.

Leave A Reply

Your email address will not be published.