முற்போக்குக் கூட்டணியை அசைக்க முயல வேண்டாம் அந்தப் பருப்பு இந்த நெருப்பில் வேகாது என்று மனோ ஆவேசம்.

“தமிழ் முற்போக்குக் கூட்டணியையும் அசைக்க யாரும் முயல வேண்டாம். இங்கே அந்தப் பருப்பு, இந்த நெருப்பில் வேகாது.”

இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் மனோவின் முகநூல் பதிவில்,

“தமிழ் முற்போக்குகே கூட்டணி, அரசுடன் இணையவோ, அமைச்சுப் பதவிகள் பெறவோ, தீர்மானிக்கவே இல்லை.

உண்மையில், ‘நாட்டை கரை சேர்க்க தேசிய சர்வகட்சி வேலைத்திட்டம்’ என்ற தலைப்பில் ஜனாதிபதி விடுத்த அழைப்புக்கான எமது பதில் தொடர்பில், ஐக்கிய மக்கள் கூட்டணிக்குள்ளே நாம் கடுமையாக இரவு பகல் உரையாடிக்கொண்டு இருக்கின்றோம்.

ஜனாதிபதியை, ஐக்கிய மக்கள் கூட்டணியாகக் கடந்த 5ஆம் திகதி சந்தித்தோம்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியாக 10ஆம் திகதி சந்திக்கவுள்ளோம். நாம் பிரதிநிதித்துவம் செய்யும் எமது மக்களின் அபிலாஷை, சவால்கள் பற்றி உரையாடுவோம்.

இதற்குள் ‘அமைச்சுப் பதவிகளுக்காக கூட்டணிக்குள் முரண்பாடு” என்று ‘பொறுப்புள்ள தினக்குரல், காலைக்கதிர்’ உட்பட சில மஞ்சள், கடும் மஞ்சள் இணையங்கள் எழுதுகின்றன.

ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள், ‘டலசுக்கு எத்தனை பேர், ரணிலுக்கு இத்தனை பேர்’ என்று கும்மி அடித்து, சிரித்து முடித்தாகி விட்டது.

அதைப் பார்த்து, இப்போது தமிழ் முற்போக்குக் கூட்டணியையும் அசைக்க யாரும் முயல வேண்டாம். இங்கே அந்தப் பருப்பு, இந்த நெருப்பில் வேகாது. நாம் ஒருசேரத்தான் முடிவுகள் எடுப்போம்” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.