ஆயுத உற்பத்தியாளர்களின் பரீட்சைக் களமான உக்ரைன் – ரசிய போர் தளம்? : சண் தவராஜா

ரஸ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்களைக் காப்பதற்காகவும், ஜனநாயகத்தை மீட்பதற்காகவும் போர் புரிவதாக உக்ரைன் தரப்பிலும், அந்த நாட்டுக்கு ஆதரவாகச் செயற்படும் மேற்குலகின் சார்பிலும் முன்வைக்கப்படும் பிரசாரங்களைப் பொய்ப்பிக்கும் வகையிலான அறிக்கை ஒன்றை சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ளது.

“உக்ரைன்: குடிமக்களைப் பாதிக்கும் உக்ரைனின் போர்த் தந்திரங்கள்” என்ற தலைப்பில் ஆகஸ்ட் 4ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு முரணாக உக்ரைன் நாட்டுப் படையினர் பல சந்தர்ப்பங்களில் செயற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் முதல் யூலை வரையிலான காலப் பகுதியில் கிழக்கு உக்ரைனின் கார்கிவ், டொன்பாஸ் மற்றும் மைகொலைவ் ஆகிய பிராந்தியங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் இந்த அறிக்கையில் அடங்கியுள்ளன. இந்த ஆய்வுகளில், உக்ரைன் படையினர் பொதுமக்கள் வாழும் இடங்களின் அருகாமையில் இருந்து படை நடவடிக்கைகளை மேற்கொண்டது முதல் பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் படைத் தளங்களைப் பேணி வந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளைப் போர் நடவடிக்கைகளுக்குப் பாவிப்பது பன்னாட்டு மனிதாபிமானச் சட்டங்களுக்கு அமைவாகத் தடைசெய்யப்பட்ட விடயம் என்பது யாவரும் அறிந்ததே. பாடசாலைகளை படைத் தளங்களாகப் பயன்படுத்துவது சட்டத்துக்கு முரணான விடயமாக இல்லாவிடினும், அவ்வாறு பயன்படுத்துவதால் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுமாயின் அது தவிர்க்கப்பட வேண்டும் என்பது கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பது சர்வதேச மன்னிப்புச் சபையின் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்தக் காலப்பகுதியில் 5 மருத்துவமனைகள் உக்ரைன் படைகளினால் படைத் தளங்களாகப் பாவிக்கப்பட்டுள்ளன. அது மாத்திரமன்றி மன்னிப்புச் சபையின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 29 பாடசாலைகளில் 22 பாடசாலைகள் ஆய்வு வேளையில் படைத்தளங்களாகப் பாவிக்கப்பட்டு வந்துள்ளமை அல்லது முன்னர் பாவிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. பாக்முற் என்ற இடத்தில் ஒரு பல்கலைக் கழகம் கூட படை முகாமாகப் பனப்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இது தவிர, 19 நகரங்கள் மற்றும் கிராமங்களில் பொதுமக்கள் செறிவாக வாழும் இடங்களில் இருந்து ரஸ்யப் படைகள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்த வேளைகளில் இடம்பெற்ற பதில் தாக்குதல்களில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டமை சாட்சியங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்து. அதிலும் கூட குறித்த இடங்கள் போர்முனையில் இருந்து பல கிலோ மீற்றர் தொலைவில் இருந்தமையும், அருகே காடுகள் இருந்த போதிலும், படையினர் அங்கே நிலைகொள்ளாமல் மக்கள் வாழிடங்களின் மத்தியில் இருந்துகொண்டே தாக்குதல்களை நடாத்தியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

பெப்ரவரி 24ஆம் திகதி உக்ரைன் மீதான தாக்குதல்களை ரஸ்யா ஆரம்பித்த நாள் முதலாக ரஸ்யப் படைகள் மீது போர்க் குற்றச்சாட்டுகளை உக்ரைனும், மேற்குலகும் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருவது தெரிந்ததே. இந்தக் குற்றச் சாட்டுகளைத் தொடர்ச்சியாக மறுதலித்துவரும் ரஸ்யா, தான் வேண்டுமென்றே பொதுமக்கள் இலக்குகள் மீது தாக்குதல்களைத் தொடுப்பதில்லை எனத் பதிலளித்து வருகின்றது. அதேவேளை, உக்ரைன் படையினர் – குறிப்பாக அவர்களோடு இணைந்து செய்படும் நவீன நாசிக்கள் – ரஸ்யா மீது பழியைப் போடுவதற்காகத் திட்டமிட்டு சில விடயங்களை அரங்கேற்றி வருகின்றனர் என்றும் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றது. ரஸ்யாவின் இந்தக் கூற்றுகள் ஓரளவு உண்மை என்பதையே தற்போதைய மன்னிப்புச் சபையின் அறிக்கை சுட்டி நிற்கின்றது. ஏற்கனவே, உக்ரைன் படையினரின் ஒருசில மக்கள்விரோத நடவடிக்கைகள் தொடர்பில் ஐ.நா. சபையும் சுட்டிக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறம், அண்மைக் காலமாக ரஸ்ய எதிர்ப்புப் பரப்புரையை அளவுக்கு அதிகமாக மேற்கொண்டுவரும் யேர்மனிய ஊடகமான ‘டெர் ஸ்பீகல்’ ஆகஸ்ட் 5ஆம் திகதி வெளியிட்ட செய்தியொன்றில் தமது ஆய்வில் கூட மன்னிப்புச் சபை வெளியிட்ட தகவல்களுக்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், உக்ரைன் படையினரின் நடவடிக்கைகள் சட்ட அடிப்படையிலான கேள்விகளை எழுப்புவதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குற்பிப்பிடத்தக்கது.

உலக அரங்கில் ரஸ்யாவை படுமோசமான வில்லனாகவும், உக்ரைனை மனிதாபிமானம் மிகுந்த சிறந்த கதாநாயகனாகவும் காட்சிப்படுத்தி வந்த மேற்குலகிற்கும், அதன் ஊடகங்களுக்கும் மன்னிப்புச் சபையின் அறிக்கை பேரிடியாக அமைந்திருந்ததை மறுப்பதற்கில்லை. சில ஊடகங்கள் வழமை போன்று இந்த அறிக்கையைக் கண்டுகொள்ளவேயில்லை. அதிலொன்றும் ஆச்சரியம் இருக்க முடியாது.

அதேவேளை, உக்ரைன் அரசுத் தலைவர் விளாடிமிர் ஷெலன்ஸ்கி, ‘மன்னிப்புச் சபையின் அறிக்கை ஆக்கிரமிப்பாளரை விட்டுவிட்டு பாதிக்கப்படுவோர் மீது குற்றம் சுமத்துவது போல உள்ளது” எனத் தனது வழக்கமான பாணியில் தெரிவித்துள்ளார்.

மறுபுறம், சர்வதேச மன்னிப்புச் சபையின் உக்ரைன் நாட்டுக்கான பிரதிநிதியாகப் பணியாற்றிவந்த ஒக்சானா பொகல்சுக் பதவி விலகலை அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் குறித்த அறிக்கை ரஸ்யாவின் பரப்புரையை ஒப்புவிப்பது போல் உள்ளது எனத் தெரிவித்து உள்ளார். இந்த ஆய்வு நடப்பது தொடர்பில் முன்னர் ஒருமுறை ஊடகங்களுக்குச் செய்தி வழங்கியிருந்த அவர், உக்ரைனில் நடைபெறும் ரஸ்ய மற்றும் உக்ரைன் படைகளின் போர்க் குற்றங்கள் தொடர்பிலேயே தாம் ஆய்வு நடத்தி வருவதாகக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அது மாத்திரமன்றி, இந்த அறிக்கை வெளிவருவதைத் தடுத்துவிட அவர் இறுதிநேரம் வரை முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த யூன் மாதத்தில் உக்ரைன் போர் தொடர்பில் மன்னிப்புச் சபை வெளியிட்டிருந்த அறிக்கையில் ரஸ்யப் படைகள் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டிருந்தன. பொதுமக்களுக்கு இழப்பை ஏற்படுத்தும் தாக்குதல்கள் உட்பட, தடை செய்யப்பட்ட கொத்தணிக் குண்டுகளைப் பாவித்ததாகவும் ரஸ்யப் படைகள் மீது சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியிருந்தது. அப்போது பன்னாட்டு ஊடகங்கள் அந்த அறிக்கையைத் தமது பரப்புரைக்குத் தாரளமாகவே பயன்படுத்தியிருந்தன. எனினும் தற்போதைய அறிக்கை வெளிப்படையான மற்றும் மறைமுகமான கண்டனங்களுக்கு ஆளாகியிருப்பதைப் பார்க்க முடிகின்றது.

இதன் விளைவாக தனது அறிக்கை தொடர்பில் வருத்தம் தெரிவிக்கும் நிலைக்கு(?) சர்வதேச மன்னிப்புச் சபை தள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கல்லமார்ட், தங்கள் அறிக்கையின் விளைவாக ஏற்பட்டுள்ள கவலை மற்றும் துன்பம் என்பவற்றுக்காக வருந்துவதாகத் தெரிவித்துள்ளார். எனினும் தமது அறிக்கையை மீளப் பெறப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள அவர், உக்ரைன் படையினரின் செயற்பாடுகள் ரஸ்யப் படையினரின் மீறல்களை நியாயப்படுத்துவதாக ஆகாது என்றும் கூறியுள்ளார்.

என்னதான் இருந்தாலும், மன்னிப்புச் சபையின் அறிக்கை நடப்பு நிலவரங்களை ஓரளவுக்கேனும் வெளிப்படுத்தி உள்ளமையை ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். இன்றுவரை வெளியாகியுள்ள தகவல்களின் பிரகாரம், உக்ரைன் போரில் 5,000 வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், சற்றொப்ப 7,000 வரையானோர் காயமடைந்தும் உள்ளனர். இவர்கள் ரஸ்யப் படையினரின் தாக்குதல்களால் உயிரிழந்தோ, காயமடைந்தோ இருந்தாலும் இதற்கான முழுப் பொறுப்பையும் ரஸ்யப் படைகள் மீது மட்டும் சுமத்துவது நியாயம் இல்லாதது என்பதையே மன்னிப்புச் சபையின் அறிக்கை நமக்கு உணர்த்துகின்றது.

சர்வதேச மன்னிப்புச் சபை ஒன்றும் முற்று முழுதாக நீதியின் அச்சில் செயற்படும் ஒரு அமைப்பு அல்ல என்பதை ஈழத் தமிழர்கள் நன்கு அறிவார்கள். மூன்று தசாப்த காலப் போர் தொடர்பில் மன்னிப்புச் சபை உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகள் எவ்வாறு நடந்து கொண்டன என்பது தமிழ் மக்களின் மனதில் இன்றும் பசுமையாக உள்ளது. ஆனாலும், தமது வழக்கமான பாதையில் இருந்து விலகி இதுபோன்ற ஒரு அறிக்கையை வெளியிட்டு உண்மை நிலையை உலகிற்குக் காட்டியமைக்காக அந்த அமைப்பைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலக்ஸி றெஸ்னிக்கோவ், தமது நாடு மேற்குலக ஆயுத உற்பத்தியாளர்களின் பரீட்சைக் களமாக மாறியிருப்பதாக அண்மையில் கூறியிருந்தார். அவரது கூற்றின் உண்மைத் தன்மையைப் புரிந்துகொள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கை எமக்கு உதவியாக இருக்கின்றது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

Leave A Reply

Your email address will not be published.