கோட்டாபய வெளிநாடுகளில் ஏன் ஒளிந்து வாழ வேண்டும்? இலங்கைக்கு வரும் அவர் அரசியலில் ஈடுபடமாட்டார்.

“இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச, வெளிநாடுகளில் ஒளிந்து வாழ்வதை அனுமதிக்க முடியாது. நாடு திரும்பும் அவர் மீண்டும் அரசியலுக்கு வருவது தொடர்பில் எதனையும் அறிவிக்கவில்லை. அரசியலுக்கு வரும் முடிவை அவர் எடுப்பார் என நான் நம்பவில்லை.”

இவ்வாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“இந்த நாட்டின் சாதாரண குடிமக்களுக்கு இருக்கும் சுதந்திரம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இருக்க வேண்டும். அவர் தனது அமெரிக்க குடியுரிமையைத் துறந்து, இந்த நாட்டுக்காகப் பணியாற்றினார். எனவே, அவர் வெளிநாடுகளில் ஒளிந்து வாழ்வதை அனுமதிக்க முடியாது. இது அவரது மனித உரிமை மீறலாகும்.

எனவே, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, அவர் இந்த நாட்டுக்குத் திரும்புவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தோம்.

அதேபோன்று இடைக்கால அரசையோ அல்லது இடைக்கால நிர்வாகத்தையோ விரைவில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்தோம். ஏனெனில், இந்தப் பிரச்சினையை மேலும் இழுத்தடிக்க அனுமதிக்க முடியாது.

நாடு டொலர் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகின்றது.

இன்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு நாடாளுமன்றத்தில் 145 எம்.பிக்கள் உள்ளனர்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.