வல்வெட்டித்துறை நகர சபையை மீண்டும் இழந்த கூட்டமைப்பினர்.

யாழ்., வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் இராமச்சந்திரன் சுரேன் தெரிவாகியுள்ளார்.

வல்வெட்டித்துறை நகர சபைக்கான தலைவர் தெரிவு இன்று நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

அதன்போது தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் இராமச்சந்திரன் சுரேனுக்கு ஆதரவாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் இருவர், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவர், சுயேச்சைக் குழுவைச் சேர்ந்த நால்வர், தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் ஒருவர் என 8 பேர் வாக்களித்தனர்.

இவருடன் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உறுப்பினர் க.சதீஸுக்கு ஆதரவாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 6 பேரும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் இருவருமாக 8 வாக்குகள் அளிக்கப்பட்டன.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் சபைக்குச் சமூகமளிக்கவில்லை.

அந்நிலையில், நகர சபைக்கான தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட இருவரும் தலா 8 வாக்குகளைப் பெற்று சமநிலையாக இருந்தமையால் குலுக்கல் முறையில் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் இ.சுரேன் தலைவராகத் தெரிவானார்.

Leave A Reply

Your email address will not be published.