கோட்டாவைப் பாதுகாக்கவே போராட்டக்காரர்கள் கைது! – பொன்சேகா குற்றச்சாட்டு.

“நாட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இலங்கையில் அடைக்கலம் கொடுத்து அவரைப் பாதுகாக்கவே போராட்டச் செயற்பாட்டாளர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்து அடக்கி வருகின்றார். ஆனால், இதன் விபரீதத்தை அவர் விரைவில் எதிர்கொள்வார்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“அரசுக்கு எதிரான போராட்டச் செயற்பாட்டாளர்களை அடக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையேல் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நடந்த அவமானத்தைப் போல் இந்நாள் ஜனாதிபதியும் சந்திக்க வேண்டி வரும்.

69 இலட்சம் மக்கள் தனக்கு வாக்களித்தார்கள் என்று மார்தட்டி வீர வசனம் பேசிய கோட்டாபய இறுதியில் இலங்கையைவிட்டு விரட்டியடிக்கப்பட்டார். இன்று எந்த நாடும் அடைக்கலம் கொடுக்காத நிலையில் அவர் மீண்டும் இலங்கைக்கு வர எத்தனிக்கின்றார்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.