போராட்டங்கள் ஓயவில்லை; எதிர்காலத்தில் வெளிப்படும் – பொன்சேகா எச்சரிக்கை.

போராட்டங்கள் வெளியில் தெரியாவிட்டாலும் நீறுபூத்த நெருப்பைப் போன்று இருக்கின்றது என்றும், எதிர்காலத்தில் மீண்டும் வெளியில் தெரியும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் மக்களால் வாழ முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. உணவு, மருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது. போசனை குறைபாடு உள்ள நாடுகளில் இலங்கை 6 ஆம் இடத்துக்கு வந்துள்ளது.

அத்துடன் இப்போது நீர்க் கட்டணம் அதிகரித்துள்ளதால் மக்கள் குளிக்கக் முடியாது வாவிகளில் பாய்ந்து நீந்த வேண்டியும் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, பொருளாதார நெருக்கடிகளால் பல்வேறு பிரதான நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கவும் திட்டமிட்டு வருகின்றன. மின்சாரக் கட்டண அதிகரிப்பு மற்றும் எரிபொருள் விலையேற்றங்களாலும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பல்வேறு விடயங்களில் ஊழல், மோசடிகள் நடக்கின்றன. இந்த அரசு அந்த எண்ணத்தில் இருந்து விடுபடப் போவதில்லை.

போராட்டம் எனும் போது ஜனாதிபதியை விரட்டுவது அல்ல. அதன் நோக்கம் ஊழல், மோசடி அரசியல்வாதிகளை விரட்ட வேண்டும். இவர்களை அதில் இருந்து நீக்க வேண்டும். இதுவே நடக்க வேண்டும்.

போராட்டங்கள் காலிமுகத்திடலில் தெரியாவிட்டாலும் மக்களின் மனங்களில் உள்ளது. பெரும்பான்மையான மக்களின் மனங்களில் உள்ளதுடன், மொட்டுக் கட்சியினரின் மனதில் இல்லாவிட்டாலும் வயிற்றிலும், சமையலறையிலும் உள்ளது.

இதனால் தாக்குதல் நடத்தி, ஒடுக்குமுறைகளை முன்னெடுத்துப் போராட்டங்களை நிறுத்த முடியாது.

போராட்டங்கள் சாம்பலுக்குள் உள்ள நெருப்பைப் போன்று எதிர்காலத்தில் வெளியில் வரும். அதற்குத் தேவையான பலத்தை நாங்கள் வழங்குவோம்.

போராட்டம் இன்றி வேறு எந்த முறையிலும் ஊழல் அரசியல்வாதிகளிடம் இருந்து நாட்டை மீட்க முடியாது. இதனால் போராட்டத்தைத் தொடர்ந்தும் கொண்டு செல்ல வேண்டும்.

போராட்டகாரர்களைக் கைது செய்கின்றனர். எமது பிள்ளைகளை நிச்சயமாக மீட்க வேண்டும். சட்டத்தரணிகள் இதற்காக இணைய வேண்டும். அதேபோன்று மக்களும் ஒன்றிணைய வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.