எந்தவொரு அரசியல் சதியாலும் இந்த அரசைக் கவிழ்க்க முடியாது – பிரதமர் தினேஷ் திட்டவட்டம்.

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இந்த ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாது. இந்த ஆட்சியில் அரசியல் சூழ்ச்சிக்கு ஒருபோதும் இடமில்லை.”

இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“என்னைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் பிரதமராக்க ஆளும் தரப்புக்குள் சிலர் சூழ்ச்சி செய்கின்றனர் என்று வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் வதந்தி.

ஜனாதிபதியின் விருப்பத்துடனும் ஆளும் கட்சியின் பெரும்பான்மைப் பலத்துடனும் நான் பிரதமர் பதவியை வகிக்கின்றேன். இது நான் தேடிச் சென்று பெற்ற பதவி அல்ல. இந்தப் பதவி என்னைத் தேடியே வந்தது.

பிரதமர் பதவியிலிருந்து என்னை நீக்கத் திரைமறைவில் எந்தச் சூழ்ச்சியும் இல்லை. எவரினதும் அழுத்தமும் எனக்கு வரவும் இல்லை.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏகோபித்த ஆதரவுடன்தான் நான் பிரதமர் பதவியை வகிக்கின்றேன். நாடு திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்குள் பிரவேசிக்கும் இன்னமும் முடிவை எடுக்கவில்லை.

அவர் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ளார் எனவும், பிரதமராகப் போகின்றார் எனவும் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.