பிரதமர் மோடியின் பரிசுப் பொருள்கள் இன்று முதல் ஏலம்!

பிரதமர் மோடிக்கு பரிசாக அளிக்கப்பட்ட 1,200 பொருள்கள் இன்று முதல் ஏலத்தில் விடப்படுகின்றன.

பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக அளிக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவச் சிலை உள்ளிட்ட 1,200 பொருள்கள் இன்று முதல் ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன.

இது தொடர்பாக மத்திய கலாசாரத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தில்லியில் செய்தியாளர்களிடம், ‘விநாயகர் சிலை, அயோத்தியில் அமைக்கப்பட உள்ள ராமர் கோயிலின் மாதிரி சிலை, வாராணசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் சிலை உள்பட பிரதமருக்கு நினைவுப் பரிசாக அளிக்கப்பட்ட பொருள்கள் இணைய வழி ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன.

இவற்றின் விற்பனையின் மூலம் கிடைக்கும் தொகையாக நமாமி கங்கே திட்டத்திற்கு பயன்படுத்திக்கொள்ளப்படும். சில விளையாட்டு வீரர்கள் பிரதமருக்கு பரிசளித்த விளையாட்டுத் துறை தொடர்பான நினைவுப் பொருள்களும் ஏலத்தில் விற்பனை செய்யப்படும்’ என்று தெரிவித்தார்.

தில்லி தேசியக் கலைக்கூடத்தில் உள்ள பிரதமர் மோடியின் பரிசுப் பொருள்கள் அக்டோபர் 2 ஆம் தேதி வரை ஏலம் விடப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.