பாகிஸ்தான் வெள்ளத்திற்கு ஒரு கோடியே 60 லட்சம் குழந்தைகள் பாதிப்பு.

பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிற்கு சுமார் ஒரு கோடியே 60 லட்சம் குழந்தைகள் பாதிக்கப் பட்டுள்ளதாக ஐ.நா.சபை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளில் மூன்றரை லட்சம் குழந்தைகளுக்கு உடனடி உயிர்காக்கும் சிகிச்சை தேவை என்று ஐ.நா.சர்வதேச குழந்தைகள் அவசர நிதிய பிரதிநிதி அப்துல்லா ஃபாடில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வயிற்றுப்போக்கு, டெங்கு காய்ச்சல் மற்றும் தோல் நோய் பாதிப்பு என பல பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார். அண்மையில் அந்த பகுதியில் ஆய்வு செய்த அவர், இதுரை 528 குழந்தைகள் உயிரிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சிறு குழந்தைகள் தங்கள் குடும்பங்களுடன் குடிதண்ணீர், உணவு மற்றும் வாழ்வாதாரம் இல்லாமல் திறந்த வெளியில் வாழ்வதாகவும், வெள்ளத்தால் கட்டிடங்கள், ஆயிரக்கணக்கான பள்ளிகள், நீர்நிலை அமைப்புகள் மற்றும் சுகாதார வசதிகள் உட்பட முக்கிய உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு ஏற்பட்ட மழை வெள்ளத்திற்கு 1,545 பேர் உயிரிழந்து உள்ளனர், மேலும் 12,850 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.