திலீபன் நினைவேந்தலைப் குழப்பியது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே – ஜனநாயகப் போராளிகள் குற்றச்சாட்டு.

“போராளிகளைப் பற்றிக் கதைப்பதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு எவ்வித அருகதையும் இல்லை” – என்று ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தியாகி திலீபனின் நினைவேந்தலின் போது தங்களின் பிழைகளை மூடி மறைக்க அவசர அவசரமாக ஊடக சந்திப்பை நடத்தி பச்சைப்பொய்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சுகாஷ் அவிழ்த்து விட்டுள்ளார். பொய்களைக் கூறி முன்னாள் போராளிகள் மீது அவதூறைப் பரப்பியமைக்கு அவருக்கு எமது கண்டனங்களையும் தெரிவிக்கின்றோம்.

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் நினைவேந்தலின் போது இருவர் காவடிகள் எடுத்து வந்தபோது பொதுமக்கள், முன்னாள் போராளிகள் எனப் பலர் அவ்விடத்தில் நின்றார்கள். காவடி வரும் போது எந்தக் குழப்பமும் ஏற்படவில்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்தான் குழப்பங்களை ஏற்படுத்தினார்கள்.

காவடியை இறக்குவதற்காகப் பொதுச்சுடரைச் சற்று தள்ளிவைக்குமாறு கூறிய போதே குழப்பங்கள் ஏற்பட்டன. தீபத்தைத் தள்ளி வைக்க முடியாது; காவடியை இங்கே இறக்க முடியாது என அடாவடி செய்த பின்னரே குழப்பம் ஏற்பட்டது. அது அனைத்து ஊடங்களிலும் வெளிவந்தன.

அடுத்து தாம் ஆறு ஆண்டுகளாக நினைவேந்தல் செய்து வருகின்றனர் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கூறுகின்றார்கள். யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2016ஆம் ஆண்டு தியாக தீபத்தின் நினைவிடத்தை முதலில் துப்பரவாக்கி முதல் நிகழ்வை நாங்கள்தான் செய்தோம். அதற்கு ஆதாரங்களாக ஊடகங்களில் செய்திகள் உள்ளன.

இவ்வாறாக இருக்க ஆறு ஆண்டுகளாகத் தாம் செய்கின்றோம் என்கின்றார் சுகாஷ். அவருக்குக் கணக்குத் தெரியாது போல். இனி நாம் அவருக்கு ஒன்று, இரண்டு சொல்லி கொடுக்க வேண்டும் போல்.

நாம் முதல் முதல் செய்த ஒரு வருட நிகழ்வை மூடி மறைத்து தங்களின் சுயலாப அரசியலுக்காக எங்களால் நினைவுகூரப்பட்ட நினைவேந்தலை அவர்கள் மறைக்கின்றார்கள்.

அடுத்து 2017ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்காக நாம் அவ்விடத்தைத் துப்பரவு செய்யும்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் வந்து எங்களோடு கதைத்தார்கள். நாங்கள் இரு தரப்பும் சேர்ந்து ஒன்றாகச் செய்வோம் என்று எங்களுடன் அவர்கள் பேச்சுக்களை நடத்தினர்.

மறுநாள் கட்சி அலுவலகத்திற்கு எம்மை அழைத்து, கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் கதைத்து நாங்கள் சம்மதம் தெரிவித்த பின்னரே இரு தரப்பினரும் சேர்ந்துதான் 2017ஆம் ஆண்டு நினைவேந்தலைச் செய்தோம்.

அப்படியாயின் நாங்கள் யார் ? இப்போது 2015ஆம் ஆண்டு எங்களை மஹிந்தவால் உருவாக்கப்பட்டவர்கள் என்கிறார்கள். அப்படியாயின் ஏன் 2017ஆம் ஆண்டு எங்களைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் அழைத்துக் கதைக்க வேண்டும் ?

அதேவேளை, 2017ஆம் ஆண்டு முதல் முதல் மறவன்புலவு பிரபாகரன் தூக்குக் காவடி எடுத்தார். அப்போது எங்களுடன் நின்றவர்கள்தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்.

நாங்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்ணியினரும் இணைந்து 2017ஆம் ஆண்டு நினைவேந்தலை நடத்தினோம் என மறுநாள் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.

அடுத்து 2018ஆம் ஆண்டு யாழ். மாநகர சபை மேயராக ஆர்னோல்ட் இருந்தபோது மாநகர சபை ஆளுகைக்குள்தான் நினைவிடம் உள்ளது. அதனால் தாம்தான் செய்வோம் எனக் கூறியமையால் சர்ச்சைகள் ஏற்பட்டன. ஆனாலும், அவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட அந்த நிகழ்விலும் நாங்கள் பங்குபற்றினோம்.

போர் முடிவடைந்த பின்னர் 2016ஆம் ஆண்டு முதலாவதாக நாங்கள் தனியே நினைவேந்தல் செய்கின்றோம். அடுத்த ஆண்டு 2017 நாங்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் இணைந்து இரண்டாவது நினைவேந்தலைச் செய்கின்றோம். 2018ஆம் ஆண்டு யாழ். மாநகர சபை செய்தது. அடுத்த இரண்டு வருடங்கள் நீதிமன்றத் தடை உத்தரவு. இப்படி இருக்கையில் எப்படி 6 வருடங்கள் எனச் சொல்கின்றார்கள் ?

இவர்கள் தென்னிலங்கையில் உள்ள தமது சொத்துக்களைப் பாதுகாக்க யாழ்ப்பாணத்தில் மக்களை ஏமாற்றி அரசியல் செய்கின்றார்கள். அவர்களின் சொத்துக்களைப் பாதுகாக்க நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வேண்டும். அதற்குப் போராளிகளின் தியாகங்கள் தேவை.

தலைவரின் சொல்லுக்குச் செயல் வடிவம் கொடுத்தவர்கள் போராளிகள், மாவீரர்கள். ஆகவே, போராளிகளையே, மாவீரர்களையோ கொச்சைப்படுத்தத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு அதிகாரம் இல்லை.

நாங்கள் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் சிலைக்கு மாலை போட வரவில்லை. எங்கள் மக்களுக்காகத் தன்னுயிரை நீத்த தியாக தீபத்துக்கு அஞ்சலி செலுத்தவே வருகின்றோம். அவர்கள் விரும்பினால், ஜீ.ஜீயின் உருவப் படத்தைப் பொத்துவில் இருந்து யாழ்ப்பாணம் வரை ஊர்வலமாகக் கொண்டு வரட்டும். அப்போது தெரியும் மக்கள் அவர்களுக்குத் தரும் வரவேற்பு.

நாங்கள் மஹிந்த ராஜபக்சவையோ, கோட்டாபய ராஜபக்சவையோ இரகசியமாகச் சந்திக்கவில்லை. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் எங்களைச் சந்திக்க வரச் சொல்லி அழைப்பு விடுக்கப்பட்டது. நாங்கள் போனோம். அது ஊடகங்களுக்கும் தெரியும். பொய் சொல்லி ஒளித்துப் போகவில்லை.

சந்திப்பின் போது தேர்தலில் தமக்கு ஆதரவு தருமாறு ராஜபக்சக்கள் கோரினார்கள். நாங்கள் போராளிகள் விடயங்கள் உட்பட சில பிரச்சினைகளைச் சொன்னபோது அவர்கள் அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை.

அதனால் நாம் சஜித்துக்கு ஆதரவு வழங்க முடிவெடுத்து யாழ். ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு நடத்தி அதனைப் பகிரங்கமாகத் தெரிவித்தோம்.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ‘வட்ஸ் அப்’ குழுவில் வந்தது என்று ஒலிப்பதிவில் ஒரு சிறுதுண்டைக் காட்டித் திரிகின்றார்கள். அப்படி ஜனநாயகப் போராளிகளுக்கென எந்தவொரு ‘வட்ஸ் அப்’ குழுவும் இல்லை” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.