பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரில் இதுவரை 6 போட்டிகள் நடந்து முடிந்ததில் இரு அணிகளும் 3-3 என்ற கணக்கில் சமனிலை வகித்தன.

இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 7வது டி-20 போட்டி லாகூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் டேவிட் மலான் அதிரடியாக ஆடி 78 ரன்கள் எடுத்தார்.

கடைசி கட்டத்தில் டுகெட் 19 பந்தில் 30 ரன்னும், புரூக் 29 பந்தில் 40 ரன்னும் எடுத்தனர். இதனால் அந்த அணி 200 ரன்களை கடந்தது. இதையடுத்து, 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது.

அந்த அணியில் ஷான் மசூத் மட்டும் தாக்குப் பிடித்து அரை சதமடித்து 51 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதன்மூலம் டி20 தொடரை 4-3 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

Leave A Reply

Your email address will not be published.