கிழக்கை முழுமையாகச் சீரழித்துவிட்டார் கோட்டாவின் ஆளுநர்! – சாணக்கியன் கடும் சீற்றம்.

கோட்டாபய ராஜபக்சவின் வியத்மக அமைப்பின் உறுப்பினரான கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாணத்தை முழுமையாக நாசப்படுத்திவிட்டார் எனக் குற்றஞ்சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இரா.சாணக்கியன், மயிலந்தனை மேய்ச்சல் தரை தொடர்பில் மீண்டும் வழக்குத் தாக்கல் செய்ய நேரிடும் எனவும் கூறினார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்திலேயே இவ்வாறு தெரிவித்த சாணக்கியன் எம்.பி., மேலும் பேசுகையில்,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருசில பகுதிகள் மேய்ச்சல் தரைகள் என இதுவரை வர்த்தமானி வெளியிடப்படவில்லை.

கோட்டாபய ராஜபக்சவின் வியத்மக அமைப்பின் உறுப்பினரான கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு மாகாணத்தை முழுமையாக நாசப்படுத்தியுள்ளார்.

இந்த மேய்ச்சல் தரைப் பிரச்சினை தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் முறையாகச் செயற்படவில்லை. இதனால் பால் உற்பத்தி தொழிற்துறையும் வீழ்ச்சியடைந்து செல்கின்றது.

பால் உற்பத்தியாளர்கள் மேய்ச்சல் தரை இல்லாத காரணத்தால் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

மயிலந்தனைப் பகுதியில் அத்துமீறிய வகையில் ஒரு தரப்பினர் கூடாரமிட்டுள்ளார்கள். இந்தச் செயற்பாடுகளுக்கு எதிராகவே நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தோம்.

இவர்களை மீண்டும் அழைத்து வருவதில்லை எனப் பொறுப்பான தரப்பினர் குறிப்பிட்டதன் பின்னரே வழக்கை மீளப் பெற்றோம்.

தற்போது மீண்டும் அவர்கள் அங்கு வந்துள்ளனர். எனவே, நாங்கள் மீண்டும் வழக்குத் தாக்கல் செய்ய நேரிடும்” – என்றார்.

இதன்போது எழுந்த விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர,

“இந்த விடயம் தொடர்பில் மகாவலி அதிகார சபைக்கும், கிழக்கு மாகாண ஆளுநருக்கும் அறிவிக்கின்றோம். இந்த விடயத்தில் உணர்வுபூர்வமாகவும், பிரச்சினையற்ற வகையிலும் தீர்வு காணுமாறு ஆளுநருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கின்றோம்” – என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய சாணக்கியன் எம்.பி.,

“உத்தியோகபூர்வமான அறிவிப்பின் ஒரு பிரதியை எனக்கும் தாருங்கள். அதனை அரச அதிபருக்கு வழங்க முடியும்.

சேதன பசளை உற்பத்தி என ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலப்பரப்பு அரசியல் தரப்பினரின் நெருக்கமானவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. எனவே, இது குறித்து கவனம் செலுத்த வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.