சட்டக்கல்லூரி பரீட்சை: தமிழ், சிங்கள மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுமா? – நீதி அமைச்சர் பதில்.

2023ஆம் ஆண்டுக்குப் பின்னர் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்குத் தோற்ற வேண்டும் என்று வெளியிட்டுள்ள வர்த்தமானியை மீள்பரிசீலனை செய்ய பிரதம நீதியரசரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளதால் தமிழ், சிங்கள மாணவர்களின் அடிப்படை உரிமைக்குப் பாதிப்பு ஏற்படாது என்று நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினாக்களின் போது ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ, மேலும் கூறுகையில்,

“சிங்களம் மற்றும் தமிழ் மாணவர்கள் தங்களின் தாய்மொழியில் சட்டப் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்ய உரிமையுண்டு. வெளி நாட்டில் ஆங்கில மொழியில் சட்டப்படிப்பைப் பூர்த்தி செய்த ஒருவர் சட்டத் தொழிற்துறையில் ஈடுபடுவதற்கும், சிங்களம் அல்லது தமிழ் மொழியில் சட்டத் தொழிற்துறையில் ஈடுபடுபவர்களுக்கும் தொழிற்துறை ரீதியில் ஒருசில சிக்கல்கள் காணப்படுகின்றன

சட்டக் கல்லூரி பரீட்சையை ஆங்கில மொழியில் மாத்திரம் தோற்றும் வகையிலான வர்த்தமானி 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இந்தத் தீர்மானத்துக்கு சமூக மட்டத்தில் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு அந்தத் தீர்மானம் மாற்றியமைக்கப்பட்டு, மாணவர்கள் தமது தாய்மொழியில் பரீட்சைக்குத் தோற்ற அனுமதி வழங்கப்பட்டது.

இவ்வாறான நிலையில், 2023ஆம் ஆண்டுக்குப் பின்னர் சட்டக்கல்லூரியின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பரீட்சைகளுக்கு ஆங்கில மொழியில் மாத்திரம் தோற்ற வேண்டும் என்ற விசேட வர்த்தமானி கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்தத் தீர்மானம் தொடர்பில் மாணவர்கள் முறைப்பாடு அளித்துள்ளார்கள்.

இதையடுத்து இந்த வர்த்தமானி தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதம நீதியரசரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானியை மீள்பரிசீலனை செய்ய ஆலோசனை கோரப்பட்டுள்ளது. எனவே, தமிழ் மற்றும் சிங்கள மாணவர்களின் அடிப்படை உரிமைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது” – என்றார்.

இதன்போது எழுந்த அரச கரும மொழிகள் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார,

“தமிழ் மற்றும் சிங்கள மொழி இந்த நாட்டின் அரச கரும மொழிகள். ஆங்கில மொழி தொடர்பு மொழி.

இந்த நாட்டு மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் சட்டக் கல்லூரி பரீட்சையைத் தோற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளமை அரசமைப்புக்கு முரணானது.

உயர் வர்க்கத்தின் தேவைக்கமையவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது” – என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய முன்னாள் கல்வி அமைச்சரும் தற்போதைய போக்குவரத்து அமைச்சருமான பந்துல குணவர்தன,

“ஒரு பிள்ளை தமது ஆரம்பக் கல்வியைத் தமது தாய் மொழியில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற யுனெஸ்கோ நிறுவனத்தின் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் தமது தாய்மொழியில் பட்டப் படிப்பைத் தொடர உரிமையுண்டு.

அதற்குத் தடையேற்படுமாயின் அது அடிப்படை உரிமை மீறல். இவ்விடயம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் கூற்றை நானும் ஏற்கின்றேன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.