தமிழினத்தின் வலிகளைப் புறக்கணித்த ஐ.நா. தீர்மானம்! – நிராகரிப்பதாக யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் அறிக்கை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான தீர்மானத்தை நிராகரிக்கின்றோம் என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

“ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தற்போது முன்வைக்கப்பட்டுள்ள நியாயமற்ற தீர்மானத்தை முற்றாக நிராகரிப்பதற்கான எமது முடிவை வெளிப்படுத்தும் வகையில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த நாங்கள் இந்த ஊடக அறிக்கையை வெளியிடுகின்றோம்.

ஏனெனில் இந்தத் தீர்மானமானது தமிழர் பகுதிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரால் தமிழர்கள் மீதான அடக்குமுறைகளையும் கொடுமைகளையும் ஊக்குவிக்கும் விதமாகவே அமைந்துள்ளது.

தமிழர்களாகிய நாம் பல்லாண்டு காலமாக மிகப் பெரும் இழப்புகளையும் அழிவுகளையும் சந்தித்துள்ளோம். இந்தத் தீர்மானமானத்தினூடாக ஆகக்குறைந்தது நீதியாவது கிடைக்கும் என்று நம்பியிருந்தோம். ஆனால், இந்தத் தீர்மானத்தால் எங்களின் நம்பிக்கை பொய்த்துப்போயுள்ளது.

இந்தத் தீர்மானம், தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்கள் பற்றிய எந்தப் புரிதலையும் வெளிப்படுத்தவில்லை. ஆகக்குறைந்தது தமிழ் மக்கள் எதிர்கொண்ட துன்பங்கள், வேதனைகளைக் கூட பிரதிபலிக்கவில்லை.

இந்தத் தீர்மானம் பல தசாப்தங்களாகத் தொடர்ந்து வந்த இலங்கை அரசுகளால் தமிழர்கள் எதிர்கொண்ட கொடுமைகளுக்குத் தீர்வு வழங்கத் தவறிவிட்டது.

இந்தத் தீர்மானம் குற்றம் இழைத்தவர்களைப் பொறுப்புக்கூற வைப்பதற்குப் பதிலாக, அவர்களின் சர்வதேச குற்றங்களை வெள்ளை அடிப்பதுடன், அவர்களைப் பிணை எடுப்பதாகவே அமைத்துள்ளது.

தமது குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய தேவை இல்லை. தாம் தண்டனைக்கு உட்படுத்தப்படமாட்டோம் என உணரும் தமிழர் தாயகம் எங்கும் ஆக்கிரமித்து நிற்கும் இலங்கை அரச படையினர், எதிர்காலத்திலும் தமிழர்களுக்கு எதிராக அட்டூழியங்களைத் தயக்கமின்றி மேற்கொள்வதற்கு, இந்தத் தீர்மானம் வழி ஏற்படுத்தியுள்ளது.

ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த, ஆயிரக்கணக்கான தமிழர்களைக் காணாமல் ஆக்கிய, நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய அதே இலங்கை அரச படையினரே, அவர்களால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் மத்தியில் இன்னமும் ஆக்கிரமித்துள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இந்தத் தீர்மானம், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பாரப்படுத்துமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்த பரிந்துரையை முற்றிலும் புறக்கணித்துள்ளது. இதே பரிந்துரையை அனைத்து முன்னாள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்களும், இலங்கைக்கு வருகை தந்து அறிக்கையிட்ட ஒன்பது முன்னாள் ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர்களும் மற்றும் இலங்கை தொடர்பான ஐ.நா. நிபுணர்கள் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை, நாம் உட்பட பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், அரசியல் கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகம் உட்பட அனைத்து தமிழ் மக்கள் தரப்பினாலும் வலியுறுத்தப்பட்டது.

இலங்கையின் அரச படையினராலும் அரசியல் தலைவர்களாலும் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட வன்கொடுமைகளுக்கு நீதியைப் பெற்றுக்கொள்ளும் ஒரே வழியாக இதனையே எதிர்பார்த்திருந்தோம். ஆனால், இந்தத் தீர்மானம் எங்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் முற்றிலும் புறக்கணித்துள்ளது.

இலங்கை தொடர்பான ஐ.நாவின் உள்ளக ஆய்வு அறிக்கையின்படி, போரின் இறுதி ஆறு மாதங்களில் சுமார் 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் 2017 பெப்ரவரியில், தமிழ்ப் பெண்கள் பாலியல் அடிமைகளாகக் கையாளப்பட்ட இலங்கை இராணுவக் கற்பழிப்பு முகாம்கள் பற்றிய விவரங்களை ஐ.நாவிடம் ஒப்படைத்தது.

மேலும், இலங்கை அரச படையினரால் கைக்குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

ஐ.நாவின் மூத்த அதிகாரிகள் மற்றும் பெரும் இழப்பைச் சந்தித்த தமிழ்ச் மூகத்தின் பல்வேறு தரப்பினாலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், சமர்ப்பிக்கப்பட்ட இந்தத் தீர்மானம் இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பாரப்படுத்தத் தவறியது மட்டுமல்லாது, பாதிக்கப்பட்ட தமிழ் இனத்தின் பெரும் துயரத்தையும் வலிகளையும் புறக்கணித்துள்ளது. ஆகவே, இந்த நியாயமற்ற தீர்மானத்தை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம்” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.