ஐ.நாவின் புதிய தீர்மானத்தால் அபாய கட்டத்தில் இலங்கை! – நீதி அமைச்சர் விளக்கம்.

ஐ.நாவின் புதிய தீர்மானம் காரணமாக இலங்கை பாரதூரமான நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் காணப்படுகின்றது என்று நீதி மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாஸ ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“நாடு என்ற ரீதியில் காலத்துக்குக் காலம் ஏற்பட்ட கொள்கை மாற்றம் மற்றும் தலைவர்கள் மீதான நம்பிக்கை சீர்குலைவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கான முக்கிய காரணமாகும்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை மீதான ஐ.நாவின் புதிய தீர்மானம் தொடர்பாக எடுக்கப்படவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களிடம் நீதி அமைச்சர் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து நாட்டில் ஜனநாயக சீர்திருத்தங்களை விரைவில் ஏற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை சர்வதேச சமூகத்துடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளோம்.

புதிய தீர்மானத்தால் நாடு பாரதூரமான நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் காணப்படுகின்றது. இதன் காரணமாக சர்வதேச நாணய நிதியத்தால் நாட்டுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள கடன் தொகை மற்றும் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையும் பாதிக்கப்படலாம்.

இலங்கை தன்னிறைவை அடைந்த நாடாக இருந்தால், இந்த விடயம் தொடர்பில் கரிசனை கொண்டிருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. எனினும், இலங்கையிலிருந்து 70 வீதமான பொருட்கள் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவற்றுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதுடன், ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை நாட்டின் பொருளாதாரத்துக்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது.

எவ்வாறாயினும், நாட்டில் மறுசீரமைப்புகளை மேற்கொள்வதாக சர்வதேச நாடுகளுக்கு எடுத்துரைத்தாலும், நாட்டில் காணப்படும் சந்தர்ப்பவாத அரசியலால், சர்வதேச நாடுகளால் வழங்கப்படும் ஒத்துழைப்புகள் மேலும் தாமதமடையக்கூடும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.