பொலிஸ் பதிவுப் படிவங்களை நிரப்பிக் கொடுக்க வேண்டாம்! கொழும்பு மாநகர மக்களுக்கு அறிவுறுத்தல்.

“கொழும்பில் பொலிஸ் பதிவுப் படிவங்களை நிரப்பிக் கொடுக்க வேண்டாம்” – என்று கொழும்பு மாநகர மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி உட்பட கொழும்பு மாநகர மற்றும் மாவட்ட பொலிஸ் நிலையங்களால், வீடு வீடாகக் கொண்டுவரப்படுவதாகக் கூறப்படும் பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பிக் கொடுக்க வேண்டாம்.

இது பற்றி சட்ட ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ்மா அதிபர் விக்கிரமரத்ன ஆகியோருக்கு அறிவித்துள்ளேன். அவர்களும் இதை ஏற்றுக்கொண்டு உடன் நிறுத்துவதாக எனக்கு உறுதி அளித்துள்ளனர்.

ஜனாதிபதியின் பிரதம செயலாளர் சமன் இது பற்றி பொறுப்பில் உள்ள சகலருக்கும் அறிவிப்பதாக எனக்கு உறுதி அளித்துள்ளார்.

“பொலிஸுக்கு அல்ல, எந்த ஒரு அரசு நிறுவனத்துக்கும், தனிப்பட்ட வீட்டுத் தகவல்களைக் கொடுக்க நாம் விரும்பமாட்டோம். கொடுத்தால் அது எங்கெங்கு போகும் என எனக்குத் தெரியும்.

மேலும் இது ஒரு பொலிஸ் ராஜ்யம் அல்ல. பொலிஸ் சட்டத்தில் பதிவு செய்ய இடம் இருக்கின்றது. அது எனக்குத் தெரியும். ஆனால், அதை விசேட அவசர காலங்களிலேயே பயன்படுத்த வேண்டும்.

எங்காவது சட்டத்தை மீறுபவர்கள் இருப்பார்கள் எனில் அவர்களை அடையாளம் கண்டு கைது செய்யுங்கள்; விசாரியுங்கள்.

அதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால், பொதுவாக வீடு வீடாகப் போக வேண்டாம்.

இன்று போர் நடைபெறுகின்ற, சட்ட விரோத ஆயுத அமைப்புகள் செயற்படுகின்ற அவசர காலங்கள் அல்ல.

போர்க் காலத்திலும் நான் இங்கே தான் இருந்துள்ளேன். அந்தக் காலத்திலேயே இதைப் பொறுத்துக்கொள்ளாதவன் நான்.

இன்று இந்த சமாதான காலத்தில் இந்தப் பொலிஸ் படிவங்களை வீடு வீடாகக் கொண்டு சென்று பதிவு செய்வதா? உடன் நிறுத்துங்கள்” என்று சம்பந்தப்பட்ட அரசியல், மற்றும் நிர்வாக தரப்பினரிடம் நான் கூறியுள்ளேன்.

போராட்டக்காரர்களைக் கொழும்பில் வீடு வீடாகத் தேடுவதாக ஒரு பொலிஸ் நிலைய அதிகாரி என்னிடம் சொன்னார். அவருக்கு நான் என்ன பதில் கூறினேன் என்பதைப் பகிரங்கமாகக் கூற முடியாது.

போராட்டக்காரர்களை வெள்ளவத்தை, பம்பலப்பிட்டியில் தேட வேண்டாம் எனவும் இவருக்குக் கூறினேன். அதை எங்கே தேட வேண்டும் எனவும் கூறினேன்.

கொழும்பில் எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் இத்தகைய நடவடிக்கை தொடருமானால், அவற்றை உடன் என் கவனத்துக்குக் கொண்டு வாருங்கள் என்று ஊடகங்களைக் கோருகிறேன்.

நமது மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பரமேஸ்வரன் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு வாருங்கள். நாம் உடன் நடவடிக்கை எடுப்போம்.

இது பற்றி, பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திரா பெர்னாண்டோ, கொழும்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் சந்திரக்குமார, வெள்ளவத்தை பொறுப்பதிகாரி பிரசாந்த சில்வா, பம்பலப்பிட்டி பொறுப்பதிகாரி பத்மலால் ஆகியோருக்கும் அறிவித்துள்ளேன்” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.