ஒன்றுசேர்ந்து மீண்டும் திருட சிலர் அழுதுகொண்டே அழைக்கின்றனர்! – சாடுகின்றார் சஜித்.

நாட்டைத் தனித்தனியாகக் கொள்ளையடித்த குழுக்கள் தற்போது ஒன்று சேர்ந்து நாட்டைக் கொள்ளையடிக்க ஒருவரையொருவர் அழைத்துக்கொண்டிருக்கின்றார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

தனித்தனியாகச் செய்த திருட்டுகளும், தனித்தனியாகச் செய்த மோசடிகளும், தனித்தனியாக நாட்டை
வங்குரோத்தாக்கியதையும் இப்போது ஒன்று சேர்ந்து வங்குரோத்தாக்க ஒருவரையொருவர் தயார்படுத்தி ஒன்றிணைய முயற்சித்து வருகின்றனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சாடினார்.

இந்த நாட்டை அழித்து மக்களின் வாழ்க்கையை அசௌகரியத்துக்கு மேல் அசௌகரித்துக்குட்படுத்திய கும்பலை இந்த நாட்டில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க ஐக்கிய மக்கள் சக்தி இடமளிக்காது என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அந்தத் திருடர்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர இந்த நாட்டு மக்களும் தயாராக இல்லை என்றும் குறிப்பிட்டார்.

இன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மஹியங்கனைத் தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போது மீண்டும் டீல்கார மோசடி கும்பல் ஒன்று சேர்ந்து எழுந்து நிற்கத் தயாராகி வருகின்றது.

இதற்காக ஒன்றிணையுமாறு ஒருவர் (ரோஹித அபேகுணவர்த்தன) அழுது கொண்டே பிச்சை எடுப்பது போல கோரிக்கை விடுக்கின்றார்.

ஆனால், அவ்வாறு அழுகின்ற அவருக்கு இந்த நாட்டில் இருநூற்றி இருபது இலட்சம் மக்கள் இன்னும் அழுது கொண்டே வாழ்கிறார்கள் என்பது புரியவில்லை.

தங்கள் குழந்தைகளுக்குச் சிறிதளவு பால் மாவைக் கொடுக்க முடியாமல் தாய்மார்கள் அழுகின்றார்கள். உரங்கள் இல்லாததால் விவசாயிகள் அழுகின்றார்கள்.

எதிர்காலமின்றி இளைஞர் தலைமுறையினர் குரல் எழுப்புகின்றனர். பொதுவாக 220 இலட்சம் பேரும் அழுது கொண்டே வாழ்கின்றார்கள். அது அவர்களுக்குப் புரியாமல் இருப்பது ஆச்சரியமாகவுள்ளது” – என்றார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மஹியங்கனைத் தேர்தல் தொகுதி அமைப்பாளர் லக்‌ஸ்மன் செனவிரத்ன ஏற்பாடு செய்திருந்திருந்த இந்தக் கூட்டத்தில் கட்சியின் பெருந்திரளான ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.