குழந்தைக்கு அவசர சிகிச்சை.. மின்னல் வேகத்தில் 8 ஆம்புலன்ஸ்!

கோத்தகிரி பகுதியை சேர்ந்த பவித்ரன் என்பவரது மனைவி பிரசவத்திற்கு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர்.

போதிய தொழில்நுட்ப உபகரணங்கள் இல்லாததால் அங்குள்ள மருத்துவர்கள் குழந்தையை மேல் சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு செல்லுமாறு பரிந்துரை செய்தனர். இதையடுத்து அவரது பெற்றோர் கோத்தகிரியில் இயங்கி வரும் ஒரு ஆம்புலன்ஸ் நிர்வாகத்தை தொடர்பு கொண்டனர். உடனடியாக அதன் உரிமையாளர் அக்கீம் என்பவர் ஆம்புலன்சை எடுத்து கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார். குழந்தையை ஏற்றி கொண்டு ஒரு செவிலியருடன் கோவை நோக்கி இரவு 7.05 க்கு கிளம்பினர்.

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. என்ன செய்வது என யோசித்த ஆம்புலன்ஸ் டிரைவர் அக்கீம்பாபு, உடனே மேட்டுப்பாளையம், கோவையில் தனக்கு தெரிந்த சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் 5 ஓட்டுநர்கள் தங்களது ஆம்புலன்ஸ்சுகளை எடுத்து கொண்டு சென்றனர். மேட்டுப்பாளையம் போக்குவரத்து போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் டிரைவர்களும், போக்குவரத்து போலீசாரும் இணைந்து அங்கு போக்குவரத்தை சீர் செய்து வலி ஏற்படுத்தினர். அக்கீம் பாபுவின் ஆம்புலன்சுக்கு முன்பு 3 ஆம்புலன்ஸ்களும், பின்னால் 2 ஆம்புலன்ஸ்கள் அணிவகுத்து கோவை வரை பைலட் ஆம்புலன்சுகளாக சென்றன.

இதனை தொடர்ந்து காரமடையில் இருந்து மேலும் 3 அம்புலன்சுகள் உதவிக்கு வர ஆம்புலன்ஸ் கோவைக்குள் வந்ததும், அங்கிருந்த தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தையை அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தையை வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைக்க, உடனடியாக அங்கிருந்து ஆம்புலன்ஸ்கள் அணிவகுத்து வந்து இரவு 8.13 மணிக்கு கோவையில் மற்றொரு தனியார் மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர் .

அங்கு டாக்டர்கள் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். தற்போது குழந்தை நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 85 கிலோமீட்டர் தூரம் கொண்ட கோத்தகிரி – கோவை பாதையை 68 நிமிடங்களில் மின்னல் வேகத்தில் கொண்டுவந்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவருக்கும் அவருக்கு உதவி செய்த மற்ற 8 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.