ஹிக்கடுவையில் பாதாளக் குழு கொலையாளிகளே சுட்டுப் படுகொலை!

ஹிக்கடுவையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரண்டு ஆண்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹிக்கடுவை – திராணகம பிரதேச வீதியில் இன்று காலை 9.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காலி மேல் நீதிமன்றத்தில் குற்ற வழக்கு ஒன்றில் முன்னிலையாவதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இருவரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்காக ரி – 56 ரக துப்பாக்கிப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிழந்தவர்கள் ஹிக்கடுவை – கலுபே பகுதியைச் சேர்ந்த 47 மற்றும் 26 வயதுடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இரண்டு பேரும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஹிக்கடுவை பகுதியில் ‘கடா ரொஷான்’ எனப்படும் திட்டமிடப்பட்ட குற்றச் செயலுடன் தொடர்புடைய பாதாளக் குழு உறுப்பினர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்கள் என்று பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

அத்துடன் உயிரிழந்தவர்கள் பல மனிதப் படுகொலை மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்பதுடன், அவை தொடர்பான வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றன என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.