போராட்டத்துக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு!

வலிகாமம் வடக்கு காணி சுவீகரிப்புக்கு எதிராகக் கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்வதற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று ஊடக சந்திப்பை நடத்தி அழைப்பு விடுத்துள்ளது.

இதன்போது கருத்துத் தெரிவித்த மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள்,

“எமது மக்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் இனத்துக்காகவும் போராட்டம் ஒன்றுக்கான அழைப்பை இதன்போது விடுக்கின்றோம்.

கடந்த மாதம் காணி சுவீகரிப்பு தொடர்பாக காணி அமைச்சின் மேலதிக செயலாளர் தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

குறிப்பாக வடக்கு, கிழக்கில் காணி சுவீகரிப்பு தொடர்ச்சியாக இடம்பெற்ற வருகின்றது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

அந்தவகையில் வலிகாமம் வடக்கு காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி எதிர்வரும் 2ஆம் திகதி புதன்கிழமை காலை 10 மணியளவில் எமது யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, தமிழர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கக்கூடிய மதகுருமார், சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என அனைத்துத் தரப்பினரையும் கட்சி, பேதமின்றி இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்குமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுக்கின்றது” – என்றனர்.

இந்த ஊடக சந்திப்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் அ. விஜயகுமார், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் எஸ். றொபின், யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் சி.ஜெல்சின் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.