திருமலையில் கிணற்றிலிருந்து மாணவன் ஒருவரின் சடலம் மீட்பு.

திருகோணமலை மாவட்டம், கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலைச்சேனை பகுதியில் அரபிக் கல்லூரி மாணவன் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்கோ முகம்மதியா நகரில் வசித்து வந்த அமீர் முகம்மது அஸ்கான் (வயது 16) என்ற மாணவனே நேற்று மாலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:-

கிண்ணியா தாருல் ஹிக்மா அரபிக் கல்லூரியில் கல்வி பயின்று வந்த குறித்த மாணவன் குளிப்பதற்காக அருகில் உள்ள கிணற்றுக்குச் சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் சக மாணவர்கள் தேடிப் பார்த்தார்கள். இதன்போது மாணவனின் செருப்பு கிணற்றுக்கு அருகில் இருந்தது.

இதையடுத்து சந்தேகத்தின் பேரில் சக மாணவர்கள் கிணற்றில் இறங்கிப் பார்த்த போது குறித்த மாணவன் சடலமாகக் கிடந்தார் என்று விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கிண்ணியா தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மரணம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் மாணவன் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என்று கிண்ணியா பொலிஸார் குறிப்பிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.