கொய்யாவுக்காக நடந்த கொலை.. பழம் பறித்த தலித் இளைஞரை அடித்தே கொன்ற கும்பல்!

தோட்டத்தில் இருந்த மரத்தில் கொய்யா பறித்தற்காக தலித் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டத்தில் மனேனா என்ற கிராமத்தைச் சேர்ந்த 25 வயது தலித் இளைஞர் ஓம் பிரகாஷ். இவர் நேற்று இயற்கை உபாதை கழிக்க அங்குள்ள வயல் பகுதிக்கு சென்றார்.

தனது வேலையை முடித்து விட்டு திரும்பி வரும் போது அங்கிருந்த தோட்டம் ஒன்றில் கொய்யா மரத்தை பார்த்த ஓம் பிரகாஷ் அந்த மரத்தில் இருந்த கொய்யா பழம் ஒன்றை பறித்துள்ளார். இதை அங்கிருந்த தோட்டத்தின் உரிமையாளர்கள் பீம்சென் மற்றும் பன்வாரி பார்த்துள்ளனர்.

ஓம் பிரகாஷ் கொய்யா பழத்தை பறித்ததை கண்டு ஆத்திரத்தில் உரிமையாளர் பீம்சென், பன்வாரி மற்றும் கிராமத்தைச் சேர்ந்த பலரும் கம்புகளை வைத்து அடித்து கொடூரமாக தாக்கியுள்ளனர். இவர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் ஓம் பிரகாஷ் சம்பவயிடத்திலேயே நிலை குலைந்து மயங்கி விழுந்துள்ளார். அவரது உறவினர்கள் ஓம் பிரகாஷை தேடி சென்ற போது தான் அவர் அடிபட்டு மயங்கி கிடந்தது தெரியவந்துள்ளது.அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக காவல்துறையிடம் ஓம் பிரகாஷ் குடும்பத்தினர் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் தோட்ட உரிமையாளர்கள் பீம்சென் மற்றும் பன்வாரி இருவரையும் எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.