வடக்கில் குவிந்துள்ள போதைப்பொருள் புலனாய்வுப் பிரிவினர் என்ன செய்கின்றார்கள்? – சுரேஷ் சீற்றத்துடன் கேள்வி.

“கடற்படைக்கென தனியான புலனாய்வுப் பிரிவு, இராணுவத்துக்கென தனியான புலனாய்வுப் பிரிவு, பொலிஸ் புலனாய்வுப் பிரிவு, பயங்கரவாதத் தடைப் புலனாய்வுப் பிரிவு என பல்வேறு புலனாய்வுப் பிரிவினர் வடக்கு மாகாணத்தில் பரவலாக நிறைந்து போயிருக்கப் போதைப்பொருள் இங்கு வருகின்றது என்றால் புலனாய்வுப் பிரிவினர் என்ன செய்கின்றார்கள்?”

இவ்வாறு ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ்ப்பாணத்தில் போதைவஸ்து பாவனை என்பது போருக்குப் பின்னரே அறிமுகமானது. இன்று வரையும் யாழ்ப்பாணம் முப்படையினுடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றது. இங்கு யார் என்ன செய்தாலும் படையினருக்கு உடனடியாகவே தகவல்கள் தெரியும்.

மஞ்சள் கடத்தப்படும் போது உடனடியாகப் பிடிக்கப்படுகின்றது. வேறு பொருட்கள் வரும் போது உடனடியாகக் கடத்தல் குழு பிடிக்கப்படுகின்றது. ஆனால் போதைவஸ்து வரும் போது அவ்வாறான நிலை காணப்படுவதில்லை.

கஞ்சா வரும் போது 200 கிலோ, 300 கிலோ, 400 கிலோ பிடிபடும் அதேநேரத்தில் வெளிப் பிரதேசத்தில் இருந்து பெருந்தொகை கஞ்சா வருகின்றது என அறியப்படுகின்றது.

கடற்படையினர் இந்திய மீனவர்கள் வரக்கூடாது என்பதற்காகப் பல ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இந்திய மீனவர்கள் படகுகளுடன் கைது செய்யப்படுகின்றனர்.

இலங்கை கடற்படை திறமையாகச் செயற்படும் போது கேரள கஞ்சாவை இங்கு தடை செய்வது அவ்வளவு கடினமான விடயம் அல்ல.

கொக்கொயின், ஹெரோயின், ஐஸ் போன்ற பல்வேறு போதைப்பொருட்கள் தென்பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்துக்குத் தாராளமாக வருகின்றது. ஆனையிறவு சோதனைச்சாவடி, வவுனியா சோதனைச் சாவடிகளைத் தாண்டி மிகப் பெருமளவிலான போதைவஸ்துக்கள் வருவதுடன் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் விநியோகம் செய்யப்படுகின்றது.

யாழ்ப்பாணத்து வீதிகளில் சோதனைச் சாவடிகளைப் போடுவதால் போதைவஸ்துகளை நிறுத்திவிட முடியாது. கொழும்பிலிருந்து வரும் போதைவஸ்துகளையும் இந்தியாவில் இருந்து வரும் போதைவஸ்துகளையும் இராணுவத்தை வீதியில் போடுவதால் நிறுத்தி விட முடியாது.

பிரதான வீதிகளில் சோதனைச் சாவடிகளைப் போட்டால் உள்வீதிகளால் எவ்வாறு செல்ல முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். போதைவஸ்தை இல்லாமல் செய்வது நோக்கமா? சோதனைச் சாவடியைப் போடுவது நோக்கமா? என்ற கேள்வி எழுகின்றது. மீண்டும் இங்கு சோதனைச் சாவடிகள் அமைப்பது சாதாரண மக்களைப் பாதிக்கும்.

வடக்கு மாகாண ஆளுநர் மக்கள் பிரதிநிதிகளாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை பிரதிநிதிகளை அழைத்துப் பேச முடியும். கூட்டாகத் துறை சார்ந்த தரப்புகள் இணைந்தே பேச முடியும்.

பொலிஸாருக்கும் இராணுவத்துக்கும் போதைப்பொருள் தொடர்பான தகவல் கிடைத்தால் சம்பந்தப்பட்ட போதைப்பொருள் வியாபாரிகளுக்குத் தகவல் வந்துவிட்டது எனச் செய்தி போகின்றது. யாரும் இவர்களை நம்பி போய் தகவல் சொல்வது கடினம். அவ்வளவு விரைவாகப் போதைப்பொருள் கடத்துபவர்களுக்குச் செய்தி செல்கின்றது.

போதைப்பொருள் வியாபாரிகள் தனித்துச் செயற்படுகின்றார்களா அல்லது சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்கும் தரப்பின் பாதுகாப்புடன் செயற்படுகின்றார்களா என்ற கேள்விகள் எழுகின்றன.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாகக் கைது செய்யப்படுபவர்களுக்கு என்ன நடக்கின்றது என்பது தெரியவில்லை. அவர்களுக்கு என்ன அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்யப்படுகின்றது என்பது தெரியவில்லை. அவர்கள் எவ்வாறு வெளியில் வருகிறார்கள் என்ற கேள்வி எழுகின்றது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.