வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்படாத காணிகளை விடுவிக்கக் கோரி ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு!

யாழ். வலிகாமம் வடக்கில் இதுவரை விடுவிக்கப்படாத காணிகளை விடுவிக்கக் கோரி பொதுமக்களால் வடக்கு மாகாண ஆளுநரிடம் மகஜர் ஒன்று நேற்று கையளிக்கப்பட்டது.
வலிகாமம் வடக்கு வள நிலையம் என்னும் பொது அமைப்பினூடாக வலிகாமம் வடக்கின் மயிலிட்டி, பலாலி, தையிட்டி உள்ளடங்கலாகக் காணப்படும் விடுவிக்கப்படாத காணிகளை விடுவிக்குமாறு கோரி
பிரதேச மக்களால் குறித்த மகஜர் கையளிக்கப்பட்டது.
நீண்ட காலமாகக் கடற்றொழில் மற்றும் விவசாயம்
செய்வதற்கும் தமது இருப்புக்குமான சொந்த நிலங்கள்
இன்னமும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை எனவும், படிப்படியாக விடுவிக்கப்பட்டு வரும் நிலையில் முழுமையாக இன்னமும் விடுவிக்கப்படாமையை ஆளுநரிடம் எடுத்துக்கூறியும் குறித்த மகஜர் கையளிக்கப்பட்டது என்று காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இதற்குப் பதில் வழங்கிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தற்போதுள்ள ஜனாதிபதியின் காலத்தில் காணிகள் அனைத்தும் படிப்படியாக விடுவிக்கப்படும் என உறுதியளித்தார் என்று காணி உரிமையாளர்கள் குறிப்பிட்டனர்.