யாழ். மாநகர சபையில் குழப்பம்! – நியதிக் குழுக்களை நியமிப்பதில் ஒருமித்த கருத்தின்மை.
நியதிக் குழுக்களை நியமிப்பதில் உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தின்மையால் யாழ்ப்பாணம் மாநகர சபையின் விசேட அமர்வின் போது குழப்ப நிலை ஏற்பட்டது.
யாழ். மாநகர சபையின் முதலாவது அமர்வின் தொடர்ச்சியாக இன்று விசேட அமர்வுக்காக கடந்த 23 ஆம் திகதியன்று திகதியிடப்பட்டிருந்தது.
அதனடிடையில் இன்று காலை மேயர் மதிவதனி தலைமையில் சபையின் விசேட அமர்வு ஆரம்பமானது.
கூட்டம் ஆரம்பமான நிலையில் கடந்த வாரம் ஏற்பட குழப்பத்தால் ஒத்திவைக்கப்பட்ட சுகாதாரக் குழுவுக்கான உறுபினர்கள் தெரிவு நடைபெற்றது.
அதன் பின்னர் மேலும் சில குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
குழுக்களுக்கான உறுப்பினர்கள் தெரிவு முடிந்தவுடன் கூட்டத்தை முடித்துக்கொள்வதாக மேயர் அறிவித்து சபையில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில், சபையின் உறுப்பினர் தர்சானந்த்,
“கடந்த 23 ஆம் திகதிய கூட்டத்தில் சுகாதாரக் குழுவில் உள்வாங்கப்பட உறுப்பினர்கள் குறித்து ஏற்பட்ட இணக்கமின்மையால் கூட்டம் நிறுத்தப்பட்டு இன்று அதன் தொடர்ச்சி நடைபெற்றது. ஆனால், அன்று குழப்பத்தை ஏற்படுத்திய அதே தெரிவுகள் இன்று ஏற்றுக்கொள்ளப்படுள்ளன. இது எவ்விதத்தில் நியாயமானது.? எமக்கு எமது கருத்துக்களைக் கூற சபையில் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். கூட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டாம்.” – என்று கோரிக்கை விடுத்து சபையின் குறுக்கே சென்று மேயர் வெளியேறுவதைத் தடுத்ததால் குழப்பம் ஏற்பட்டது.
ஆனாலும், மேயர் வெளியேறியதால் தமக்கு தமது எதிர்ப்பைக் காண்பிக்க நியாயம் கிடைக்கவில்லை எனவும், இது சபையின் நன்மைக்கு ஏற்றதல்ல எனவும் தர்சானந்த் குறிப்பிட்டார்.
