புலம்பெயர் தமிழர்களுக்கு அஞ்சி பின்வாங்கமாட்டார் நாமல் எம்.பி.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் அழுத்தம் பிரயோகிக்கின்றன என்பதற்காக நாம் சும்மா இருந்துவிடப் போவதில்லை. இலண்டனுக்கு நிச்சயமாகச் செல்லுமாறு நாமல் ராஜபக்ஷவிடம் நான் கூறியுள்ளேன்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.

பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் யூனியனில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நிகழ்த்தவிருந்த உரை, புலம்பெயர் தமிழர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“நாமல் ராஜபக்ஷவுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. இருப்பினும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவரது பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல்கள் நிலவுகின்றன.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் அழுத்தம் கொடுக்கின்றார்கள் என்பதற்காக நாம் எமது பயணங்களைக் கைவிடக் கூடாது. எனவே, எப்படியாவது இந்தப் பயணத்தை மேற்கொள்ளுமாறு நான் நாமலிடம் வலியுறுத்தியுள்ளேன்.

தற்போதுள்ள தேசிய மக்கள் சக்தி அரசும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே செயற்பட்டு வருகின்றது. எனவே, தனது பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு, நாமல் ராஜபக்ஷ உரிய நேரத்தில் ஒரு சிறந்த முடிவை எடுப்பார்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.