இன்று முதல் QR குறியீடு இன்றி எரிபொருள் வழங்குவதற்குத் தடை – மீறுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை.
நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று முதல் கியூ.ஆர். குறியீடு இன்றி எரிபொருள் விநியோகிப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்று எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையைத் தவிர்ந்து, கொள்கலன்கள் ஊடாக எரிபொருள் விநியோகிக்கும் நிலையங்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“முறையான விநியோக நடைமுறைகளைப் பின்பற்றாத காரணத்தால், பண்டாரகம பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று ஏற்கனவே அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஒரு வாகனத்திற்காகப் பெறப்பட்ட கியூ.ஆர். குறியீட்டைப் பயன்படுத்தி மற்றொரு வாகனத்திற்கு எரிபொருள் பெறுவது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, பொதுமக்கள் தமக்குரிய தொழில்நுட்பப் பிரச்சினைகளை முன்கூட்டியே தீர்த்துக்கொண்டு, சரியான கியூ.ஆர். குறியீட்டுடன் நிலையங்களுக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
தற்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மாத்திரமே தடையின்றி விநியோகத்தை முன்னெடுத்து வருகின்றது. ஏனைய சில வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்கள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளதால், அந்தப் பகுதி மக்களும் சிபெட்கோ நிலையங்களுக்கு வருவதாலேயே நீண்ட வரிசைகள் உருவாகின்றன.
எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே இந்த வரிசைகளை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக, பெற்றோல் 92 மற்றும் டீசல் விநியோகத்தை ஏனைய நிறுவனங்கள் தாமதமின்றி முன்னெடுத்தால், பொதுமக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களைக் குறைக்க முடியும்.” – என்றார்.
