59 ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்துக்கு முடிவு தமிழகத்தில் மலர்கின்றது த.வெ.க. ஆட்சி.

தமிழக சட்டசபைத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று, 59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. முதல் தேர்தலிலேயே வெற்றி வாகை சூடி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உயர்ந்துள்ளது.

எனினும், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு த.வெ.க.வுக்கு வெற்றி கிடைக்கவில்லை. அதாவது, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான், ஒரு கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும். ஆனால், த.வெ.க. 108 தொகுதிகளில்தான் முன்னிலை வகிக்கின்றது. த.வெ.க.வுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

த.வெ.க. தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றார். இதில், ஒன்றை இராஜிநாமா செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், தொகுதிகளின் எண்ணிக்கையில் ஒன்று குறையும். அதே நேரத்தில், அக்கட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் ஒருவர் சபாநாயகராக நியமிக்கப்பட வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, சபாநாயகர் வாக்களிக்க முடியாது என்பதால், மேலும் ஒரு இடம் குறையும். அப்படிப் பார்க்கும்போது, த.வெ.க.வுக்குப் பெரும்பான்மையை நிரூபிக்க மேலும் 12 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

தற்போதைய நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 6 இடங்களும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் வீதம் 4 இடங்களும், தே.மு.தி.க.வுக்கு 1 இடமும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு 2 இடங்க ளும், விடுதலைச் சிறுத்தை கட்சிக்கு 2 இடங்களும் கிடைத்துள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.வுக்கு 4 இடங்களும், பா.ஜ.க.வுக்கு 1 இடமும், அ.ம.மு.க.வுக்கு 1 இடமும் கிடைத்துள்ளன.

தி.மு.க., அ.தி.மு.க. இரு கூட்டணிகளிலும் உள்ள பிற கட்சிகளின் ஆதரவு கிடைத்தால், த.வெ.க.வுக்குக் கூடுதலாக 21 இடங்கள் கிடைக்கும். அதன்படி கணக்கிடும்போது 108 + 21 என்றளவில் 129 இடங்களை பெற முடியும். ஆனால், அவ்வளவு கட்சிகளின் ஆதரவும் த.வெ.க.வுக்கு தேவையில்லை. 12 உறுப்பினர்களின் ஆதரவே போதுமானது.

இந்தக் கணக்கு ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் இன்று சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகைக்கு வருகை தருகின்றார். தமிழகத்தில் ஆட்சி அமைக்க த.வெ.க.வுக்கு 2 வாய்ப்புகளை அவர் வழங்குவார். ஒன்று, த.வெ.க. தலைவர் விஜய்யை அழைத்து, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கக் கூறுவார். அல்லது, தனக்கு ஆதரவு தரும் கட்சிகளிடம் இருந்து கடிதங்களைப் பெற்று, அவற்றைத் தன்னிடம் வழங்கும்படி சொல்வார்.

118 இடங்களுக்கு மேல் ஆதரவு கிடைத்தால், த.வெ.க.வுக்கு ஆட்சி அமைக்கும் உரிமையை ஆளுநர் வழங்குவார். அவ்வாறு ஆதரவு கிடைக்காமல் போனால், த.வெ. க.வுக்கு ஆட்சி அமைக்கும் உரிமை கிடைக்காமல் போகும். அதுபோன்ற நிலைமை ஏற்பட்டால், இரண்டாவதாக அதிக இடங்களை பெற்றுள்ள தி.மு.க.வை ஆட்சி அமைக்க ஆளுநர் கோருவார். அவர்களாலும் ஆட்சி அமைக்க முடியாமல் போனால், அடுத்த 6 மாதங்கள் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடைபெறும். அதன் பின் னர் சட்டசபைத் தேர்தல் 34 தொகுதிகளுக்கும் மீண்டும் நடைபெறும்.

Leave A Reply

Your email address will not be published.